Sunday, April 22, 2012

" நானும் அவளும் "


      அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.

      சென்னை கிண்டியில் ஒரு  பேருந்து  நிறுத்தம்..

      இராத்திரி 10 மணிக்கு மேல இருக்கலாம்...

      இரவு பூலோக பிரமாண்டங்களின் கல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது. தெருவிளக்குகளோட  மஞ்சள் வெளிச்சத்தில சில வாகனங்கள் அதிகபட்சமான ஹாரன் ஒலிய காற்றில உமிழ்ந்துட்டு  எங்கள கடந்து போய்க்கிட்டிருந்தது. பக்கத்தில எங்கேயோ ஒரு தள்ளுவண்டிகடையில கொத்துபரோட்டா போடுற சத்தம்  நல்லா கேக்குது.அந்த சத்தம் ஏதோ பாட்டுக்கு அடிக்கிற தாளம் மாதிரி பிசிறாம கேட்டுக்கிட்டே இருக்கு.அதோட வாசனை வேற மூக்க துளைச்சு  பசிய தூண்டுது.திடீர்னு திமுதிமுன்னு ஒரு ஆறு,ஏழு தெருநாய்கள் சத்தமா குறைச்சுக்கிட்டே என்ன கடந்து வேகமா ஓடியது. எனக்கு அடிச்ச அதே வாசனை அதுங்களுக்கும்  அடிச்சிருக்கும் போல...

   அந்த ரோட்டில அந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரு நாற்பது அம்பது கடையில வேலை பார்க்கிற நபர்கள், ரோட்டில நிக்கிற ஆட்டோ டிரைவர்கள், நேரமானதால கடைகள் எல்லாத்தையும்   மூட தயாராகிட்டிருக்கிற சாலையோர வியாபாரிகள்,அவரவர் பகுதிக்கு கடைசி பஸ்ஸுக்காக காத்திருக்கிற பயணிகள்னு ஒரு பெரிய கூட்டம் அதுல  நானும் என் நண்பர் ஸ்டீபன்  ரெண்டு பேரும் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டிருந்தோம்..

        என் பெயரா, அத விடுங்க உங்க எல்லாரும் மாதிரி சமுக வலைதலங்கள்ல மொக்கராசு ,கோமாளி இப்புடி எதாவது ஒரு பெயரில புரட்சிக்கருத்துக்கள்ல கொட்டிக்கிட்டு நிஜத்தில வாய பொத்திக்கிட்டு என் வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டிருக்கிற வீரத்தமிழர்கள்ல ஒருத்தன் தான் நான்.என்ன பத்தி சொல்றதுன்னா நா ஒரு பிரைவேட் கம்பனில வேலை பாக்குறேன்.காலேஜ்  படிக்கும்போதே பார்டைமா வேலைக்கு போக ஆரம்பிச்சேன். அப்புறமா படிச்சு மூச்சு இப்ப புல்டைமா வேலைக்கு போய்க்கிட்டிருக்கிறேன்.

     என்னோட இருபத்தி மூணு வயதுக்குள்ளேயே  சரியா ஞாபகம் இல்ல, ஒரு பதினாறு பேர் மேல காதல்,முதல் காதல் யார் மேலன்னு சொன்னா சிரிக்க கூடாது. என் மூணாங்கிளாஸ் டீச்சர்  மேல இத்தனைக்கும் அவங்ககிட்ட தான் நா அதிக அடி வாங்கியிருக்கேன் ஆனா என்னமோ அவங்கள ரொம்ப பிடிச்சிருந்தது.அப்புறம் கடைசி காதல் நா முன்னாடி வேலை பார்த்த கம்பெனில என் கூட வேலை பார்த்த ஒரு பொண்ணு மேல, இடையில உள்ள லிஸ்ட் சொல்ல ஆரம்பிச்சா பத்து ஆட்டோகிராப் படம் எடுக்கலாம்.எல்லாம் ஒன் சைட் தான். ஆமா கடைசி வரைக்கும் நா யார் கிட்டயும்  என் காதல் பத்தி சொன்னதே  இல்ல,என் பிரெண்ட்ஸ் கூட "டேய் நீ மட்டும் உன் காதல்ல யாராவது ஒருத்தர்கிட்ட சொல்லியிருந்தா,இந்நேரம் கல்யாணம் பண்ணி பாதர் ஆயிருக்கலாம்டா !போற நிலைமைய  பார்த்தா நீ உண்மையிலேயே சர்ச் பாதர் ஆயிருவ போலனு கிண்டல் பண்ணுவாங்க" ஆனா எனக்கு நல்லாதெரியும்.நா பீல் பண்ண யாருக்கும் என் மேல அந்த பீல் இல்லேன்னு, முதல்ல விஷயத்துக்கு வர்றேன். என்னை பத்தி இடையில அப்பப்ப சொல்றேன். 

           நாங்க நிண்ணுக்கிட்டிருந்த அந்த கிண்டி பஸ் ஸ்டாப் ஒண்ணுல நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாயிட்டே இருந்துச்சு.கொஞ்ச நேரம் பேசாம இருந்தேன்,என் பக்கத்தில நிண்ணுக்கிட்டிருந்த என் நண்பரும் பேசுற மாதிரி தெரியல, நானே முதல்ல பேச்ச தொடங்குனேன்."என்ன ஸ்டீபன் அண்ணா நேரம் போனதே தெரியல,என்னதான் நான் சென்னையில பிறந்திருந்தாலும் வளர்ந்ததெல்லாம் ஊர்ல தான். அப்பப்ப இங்க வந்து போயிருந்தாலும் இன்னைக்கு சென்னையில எனக்கு ஒரு வித்தியாசமான நாள், மறக்க முடியாத நாள் இதுக்கெல்லாம் நான் உங்களுக்குதான் நன்றி சொல்லணும் தேங்ஸ்னா,ஒரே நாள்ல எவ்வளவு இடங்கள்ல சுத்திக்காட்டிடீங்க" ரொம்ப சந்தோமா பேசி முடிச்சேன்.ஆனா அவர் கவனமெல்லாம் வேற பக்கம் இருந்துச்சு..

      அதுக்குள்ள என் செல்போனுக்கு அவகிட்ட இருந்து ஒரு கால் வந்தது..."உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி" கொரியன் செட் ரிங் டோன் ஒரு நிமிஷம் அந்த இடத்தில இருக்கிற எல்லாரையும் திரும்ப வச்சுடுச்சு .சுத்தி ஒரு லுக் விட்டுட்டு சிரிச்சுக்கிட்டே போன் கட் பண்ணிட்டு திருப்பி நான் தான் கால் பண்ணினேன்...அவ ஹலோ டியுன்ல முன்பே வா என் அன்பே வா ஊனே வா என் உயிரே வா...பாட்டு ஓடிட்டுருந்தது ...அவ என் கால் அட்டென்ட் பண்ணல . 

         நா அன்னைக்கு முந்தினநாள் சனிக்கிழமையே சென்னை போயிருந்தேன் .என் பிரெண்ட்ஸ் அவனுங்க ஆளோட வந்துருந்தாங்க அவங்க கூட நா அவளையும் கூட்டிட்டு சிட்டிகுள்ள ஒரு பெரிய ரவுண்ட்  போயிட்டேன்.எங்க போனாலும் ஜோடி ஜோடியா வர்றதையும்,போறதையும் பார்த்தப்ப தான்  எல்லா ஊர்லேர்ந்தும் சென்னைக்கு வந்தா பிழைச்சுக்கலாம்னு ஏன் கிளம்பி வர்றாங்கனு புரிஞ்சுது...."வந்தாரை வாழவைக்கிறது சென்னைன்னு" இனி மொட்டையா சொல்லக்கூடாது வந்தாரை வாழவைப்பது சென்னை காதலர்கள்னு தான் சொல்லணும். எல்லாருமே  வன்ஜனையில்லாம செலவு பண்றாங்க.நாங்களும் சில பல மகாத்மா பட தாள்களை காலியாக்கி முதல் நாள் முடிச்சோம்.

       ஓ! அவ யாருன்னு உங்ககிட்ட சொல்லவே  இல்லலே.ஒரு சின்ன பிளாஸ் பேக்....

       அவதான் என்னோட வைப். இருங்க ..இருங்க... இன்னும் கல்யாணமெல்லாம் ஆகல.கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு அப்படி  சொன்னேன். நாங்க ரெண்டுபேரும்  கடந்த எட்டு மாசமா லவ் பண்ணிக்கிட்டிருக்கோம். ஆனா நாங்க ப்பத்தான் இரண்டாவது தடவை சந்திச்சோம். பதினேழாவது காதல் இது. டபுள் சைட்ங்க, வழக்கம் போல இதையும் நா சொல்லல  'ஏதோ மேஜிக்' என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணி அவளே லவ்வ சொல்லிட்டா, யாரும் நம்மள லவ் பண்ணலியேனு வருத்தப்பட்டுக்கிட்டிருந்த நான் அவ லவ்வ சொன்னதும் உடனே ஒத்துக்கல, என் பேங் பேலேன்ஸ் தொடங்கி எவ்வளோ சம்பளம், எவ்வளவு கடன் இருக்குங்கிறது  வரைக்கும் எல்லா  உண்மையையும் சொல்லி கொஞ்சம் டைம்மெடுத்து தான் ஒத்துக்கிட்டேன்.ஏன்னா இடையில சண்டை பிரிவு,அது இதுன்னு பிரச்சனை வந்துரகூடாதுங்கிற  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான்....

      ஒரு தடவை ஐ.லவ்.யு சொல்லவே  பயந்து நா மிஸ் பண்ணின பல பேர பத்தி நினைக்கும் போது, இப்பலாம் தினமும் அவகிட்ட  போன்ல பேசும்போது  நா சொல்ற ஐ.லவ்.யூ எல்லாத்தையும்  கணக்கு பண்ண ஆரம்பிச்சா சூப்பர் கம்ப்யுட்டரே கூட  கன்பியுஸ் ஆகி போயிரும்.இதாங்க எங்க காதல் கதையோட சுருக்கம்.இப்பவரைக்கும்  நம்ம ஊரு கரென்ட் மாதிரி ரொம்ப நல்லாவே போய்க்கிட்டிருக்கு.

          பிளாஷ்பேக் ஓவர்...

             சென்னைக்கு வந்து இரண்டாவது நாள் வேற அதனால அன்னைக்கு என் பர்ஸ் கொஞ்சம் வீக்கா தான் இருந்துச்சு.என்ன ண்ணலாம்னு யோசிக்க டைம்  இல்ல, என் பிரெண்ட் ஸ்டீபன், அந்த நாள் முழுக்க ஸ்பான்சர் பண்ணிட்டார். அவரோட புண்ணியத்தில வழக்கமா வெளியில இருந்தே வேடிக்கை பார்த்த பல இடங்களை  உள்ள போய் சுத்தி பார்த்தோம்.அப்புறம் அவளோட செலவில நெறைய பர்சேஸ் பண்ணி முடிச்சு எல்லா இடமும் சுத்திட்டு ,அவள அவளோட ஹாஸ்ட்டல்ல டிராப்  பண்ணிட்டு, நாங்க வந்த டாக்ஸிய  கட் பண்ணிட்டு நடந்தேதான் அந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்துருந்தோம்அன்னைக்கு  ாலைலயிருந்தே  மனசு சந்தோமா இருந்ததால பசியும் தெரியல, நேரம் போனதும் தெரியல... 

        நானும் என் நண்பர் ஸ்டீபன்னும் அந்த பஸ் ஸ்டாண்ட்ல பசு வருதான்னு பார்த்துக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா தள்ளி வந்து  ஒரு ஓரமா வந்துருந்தோம். அப்ப திருப்பியும் அவளுக்கு கால் டிரை பண்ணினேன். அந்ததடவை அவ என் போன அட்டென்ட் பண்ணிட்டா  நா பேசிக்கிட்டிருந்தேன், பக்கத்தில சத்தமா ஒரு குரல்  "டேய் என்னடா இவ்ளோ நேரம் பார்த்து பேசிட்டு தான வந்தீங்க அதுக்குள்ள போன்ல என்னடா பேச்சு.முதல்ல போன் கட் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம், போய் கோயம்பேட்டுக்கு பஸ் இருக்கானு கேட்டுட்டு வா" கொஞ்சம் கோபமாவே சொன்னார் ஸ்டீபன்...

         நானும் அங்க இங்க நின்னவங்கள்ல ஒவ்வொருத்தரையா பார்த்து கேக்க ஆரம்பிச்சேன்.

   தெரியல பாஸ்,

   நான் இந்த ஊர் இல்ல, வேற யார்கிட்டையாவது கேளுங்க தம்பி...,

  இருக்கலாம் இல்லாமலும் போகலாம் சும்மா நேரங்கெட்ட நேரத்தில.....,

  கடைசி ஆள் தலைய  மட்டும்தான் ஆட்டினார் !?.

         இப்படி பல பேர்கிட்ட விசாரிச்சுக்கிட்டு வரும் போதே ,என் பின்னாடி வேகமா இடிக்கிற மாதிரி வந்து சடன் பிரேக் போட்டு  ஸ்டாப்பாச்சு  ஒரு ஷேர்ஆட்டோ. அது உள்ள இருந்து கடகடன்னு  பத்து பதினைஞ்சு பேர் இறங்குறாங்க... நான் அதிர்ச்சி ஆகி நின்னத கூட கவனிக்காம "கோயம்பேடு கோயம்பேடு ஏறுங்க ஏறுங்கனு குரல் கொடுத்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகிட்டிருந்தார் அந்த ஷேர் ஆட்டோ டிரைவர்"

        நா கொஞ்சம் தள்ளி வந்தேன். ஸ்டீபனுக்கு அப்ப தான் லேசா கோபம் குறைஞ்சது. "சரி சீக்கிரம் ஏறுடா" அப்படின்னு என்ன பார்த்து சொல்லிட்டு அவர் ஆட்டோக்குள்ள வேகமா  ஏறினார்.நானும் தான்...

        நாங்க ஏறின பின்னாடி என்னோட எங்க  பின் பக்கமிருந்த சீட்டில ஒரு நாலு பசங்க முன்னாடி டிரைவர் பக்கம் ரெண்டு பசங்க, என் பக்கத்துல ஒரு பையன்னு கொஞ்சம் பேர்  உள்ள ஏறி உட்கார்ந்துக்கிட்டாங்க. ஆனா யார் முகத்திலையும் ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல. அப்ப மணி கிட்டத்தட்ட இராத்திரி 10.30. ஒரு பெரிய திணறளோட  அந்த ஷேர்ஆட்டோ மெல்ல கிளம்ப ஆரம்பிச்சுது.

      அப்ப அவசர அவசரமா  என்னோட எதிர்ப்பக்கமா காலியா இருந்த சீட்டில ஒரு மூணு நார்த் இந்தியன் பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்ல வந்து உட்கார்ந்தாங்க கூடவே  ஒரு நார்த் இந்தியன் பையன் நல்ல குண்டா வெள்ளையா ஹிந்தி காமெடி ஆக்ட்டர் மாதிரி வந்து உட்கார்ந்து இருந்தான்.அந்த பொண்ணுங்க பெர்சனாலிட்டிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல, ஆனாலும் ஆட்டோ  கிளம்பினதுலேர்ந்து அவங்க நாலு  பேரும் ஹிந்தியில ஜாலியா ஏதேதோ சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டே வந்தாங்க.நா  உட்பட சுத்தி இருக்கிற யாருக்குமே அவங்க பேசுறது என்னனு புரியலனாலும் ,என்ன தவிர எல்லாரும் சந்தோமா அவங்க நாலு பேரையும் பார்த்துக்கிட்டே ஒரு சின்ன சிரிப்போடையே வந்தாங்க.

             அப்போ அந்த ஷேர் ஆட்டோ டிரைவர் வண்டியில  இருந்த எப்.எம் ஆண் பண்ணினார்.டியூன் பணிதி இருந்தாரு கடைசில ஏதோ ஒரு எப்.எம்ல செட் பண்ணினாரு. ஒரு காதல் நிகழ்ச்சி அந்த புரோக்ராம் பண்ணிக்கிட்டிருந்த ஆர்.ஜே சில காதல் கவிதைகளை யாரோட காதல் நினைவுகளையோ உருகி உருகி ஹஸ்கி வாய்ஸ்ல பேசிக்கிட்டிருந்தார்.ஆஹா காதல் தான் எவ்வளோ பேர வாழவைக்குது....என்ன பேசினாருன்னு நா கவனிக்கல, "அடுத்து ஒரு நாலு பாட்டு வருதுன்னு" அவர் சொன்னது மட்டும் எனக்கு நல்லா கேட்டுச்சு.முதல் பாடலா காதல் ரோஜாவே பாடல் ரோஜா படத்தில இருந்து ஓட ஆரம்பிச்சுது டக்குனு எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அரவிந்த் சாமி மதுபாலா அந்த தீவிரவாதிகள் கூட்டம்னு எல்லாரும் நினைவுல வந்து வந்து போய்க்கிட்டிருந்தாங்க....

       அப்படியே  பாட்டுகேட்டுகிட்டே ஒரு மூணு  நாலஞ்சு கிலோமீட்டர் தூரம் அந்த ஷேர்ஆட்டோ சென்னையோட இரவு காட்சிகளை அழகா கடந்து போய்
க்கிட்டிருந்தது. டிராபிக் ரொம்பவே கம்மியாயிருந்தது.ரோட்ல ஆளே இல்லாட்டாலும் ரெண்டு மூணு இடத்தில ஒரு சில நிமிஷமாவது நிப்பாட்டி யாராவது வர்றாங்களானு பார்த்துக்கிட்டே தான் வண்டி ஒட்டினாரு அந்த  ஷேர்ஆட்டோ டிரைவர்.அங்கங்க பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு,அதோட வாசல்ல சின்ன சின்ன இட்லி கடைகள் முளைச்சிருந்தது.டிப் டாப்பா ஒரு கூட்டமே நின்னு அசராம சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்க... 

       நா ஸ்டீபன் அண்ணாவ திரும்பி பார்த்தேன் அப்ப அவரோட போன்ல அவர்  பிஸியாயிருந்தாரு.

       திடீர்னு ஹிந்தியில சத்தமா ஒருத்தரோட குரல் கேட்டுது, என் முன்னாடி இருந்த நாலுபேர்ல யாரோ ஒரு ஆள் பேசினாங்கனு மட்டும் புரிஞ்சுது.ஆனா 
யார் பேசினாங்க ?என்ன பேசினாங்கனு ?சத்தியமா எனக்கு தெரியல, டிரைவருக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவர் உடனே  ஷேர்ஆட்டோவ நிப்பாட்டினார். அந்த நாலு பேரும் இறங்க,அந்த இடத்துக்கு ஒரே ஒரு தமிழ் பொண்ணு மட்டும் வந்து உட்கார்ந்தா... 

       அந்த நார்த் இந்தியன்  பொண்ணுங்க இறங்கவும் லேசா சோகமான என்னோட சக பயணிகளின் முகம் இந்த பொண்ணு உள்ள வந்ததுக்கு அப்புறம் திரும்ப சந்தோசமாயிடுச்சு....

        ஆமா அந்த பொண்ணு 'தமிழ்னு' எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கு கொஞ்சம் கால் முட்டு நீளம். நான் என் சீட்ல உட்கார்ந்தாலே எதிர் சீட்ல உட்கார்ந்துருக்குறவங்களுக்கு இடிக்கும் அதான் "கொஞ்சம் தள்ளிக்கோங்கன்னு" அந்த பொண்ணு என்ன பார்த்து சொன்னத வச்சு தான் அது தமிழ்னு கண்டுபிடிச்சேன். நானும் கொஞ்சம் நிமிர்ந்து அந்த பொண்ணோட முகத்த பார்த்தேன்.
அந்த பொண்ணுக்கு ஒரு 
 இருபத்து இரண்டு இல்ல இருபத்து  மூணு வயசுக்குள்ள தான் இருக்கும்.நல்ல பெரிய கண்ணு  கண்ணெல்லாம் நல்லா வீங்கி சிவந்து  போயிருந்தது.வொய்ட் கலர் லெக்கின் கத்திரிப்பூ கலர் குர்த்தா போட்டுருந்தா ,மாநிறம் தான் கையில ஒரு செல்போன் அத தவிர ஒன்னும் இல்ல...சின்ன சினுங்களோட அந்த பொண்ணு ஜன்னல் வழியா வெளியில பார்த்து  உட்கார்ந்துகிட்டா....

       அப்ப நா
ன் என் பிரெண்டு  ஸ்டீபன்ன பார்த்து திரும்ப, சரியா அவரும் என்ன பார்த்து திரும்ப நாங்க ரெண்டும் பேரும் ஒருத்தர ஒருத்தர பார்த்துக்கிட்டோம்.எதுவும் பேசிக்காம திரும்பியும் எதிர் எதிரா திரும்பிக்கிட்டோம். நாங்க போய்க்கிட்டிருந்த ஷேர் ஆட்டோ அப்ப இன்னும் கொஞ்ச தூரம் போயிருக்கும்.எனக்கு லேசா பசி எடுக்க ஆரம்பிச்சுருந்தது....

    அந்த நேரம் எங்க எதிர புதுசா வந்து உட்கார்ந்திருந்த  அந்த பொண்ணு எதோ இடம் சொல்லி அங்க ஆட்டோ நிக்குமானு எங்ககிட்ட கேட்டா,எனக்கு முன்னாடி முந்திகிட்டு "ஆமானு சொன்னாரு" ஸ்டீபன், பதில் கிடைச்ச உடனே திரும்பவும் அந்த பொண்ணு  ஜன்னல் பக்கம்  திரும்பி உட்கார்ந்துகிட்டா,சோகமாவே இருந்தா ,காற்று அடிக்கிற வேகத்தில முகத்தில வந்து விழுற முடிய கூட விலக்காம தீவிர சிந்தனையில இருந்தா... 

       அப்ப அந்த பொண்ணுக்கு ஒரு போ
ன்கால் வந்துச்சு.முதல்ல அவ கால் அட்டென்ட் பண்ணல,திரும்ப திரும்ப கால் வந்துட்டே இருக்கு...அதே நம்பரா தான் இருக்குமுன்னு நா நெனைச்சேன்.அது சரி தான் அவ அத அட்டன்ட் பண்ணினா,கண்ணீர் வேகமா வடிஞ்சுட்டிருந்துச்சு  உடனே லேசா கண்ண துடைச்சிக்கிட்டு கொஞ்சம் கோபமாவே பேச ஆரம்பிச்சா,...

     "சொல்லு நா தான் உன்  கால் அட்டன்ட் பன்னலலேலே ", இப்ப எதுக்கு எனக்கு திரும்ப திரும்ப கால் பண்ற.... 

       ஒரு நொடி அமைதி...திரும்பவும் பேசுனா... 

       "பொய் சொல்லாத நா பதினைஞ்சு நிமிஷமா அந்த ஓயின்ஷாப் வாசலில நின்னு உன்ன பார்த்துக்கிட்டு தான்     இருந்தேன். எனக்கு எல்லாம் தெரியும்" 

      "உன்கிட்ட பேசவே எனக்கு தோனல "

       வை போன ...

        இப்படி படபடனு அந்த ஆட்டோல இருந்த எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தமா பேசிட்டு அந்த பக்கம் பதில எதிர்பார்க்காம போன் கட் பண்ணிட்டு தலைய குனிஞ்சு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிச்சுட்டா, பார்க்கிறதுக்கே ரொம்ப பாவமா இருந்துச்சு.அப்ப அந்த பொண்ண பார்த்து தண்ணி குடிக்கீறீங்களா மேம்னு கேட்டாரு என் பிரெண்டு ஸ்டீபன், குனிஞ்ச தலை நிமிராம "தேங்க்ஸ் சார்னு "சொல்லிட்டு அந்த பொண்ணு தொடர்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சு....

     காற்று வேற ரொம்ப சில்லுனு அடிச்சிட்டிருந்தது ....ஆனா அத அனுபவிக்க முடியாத ஏதோ ஒரு விஷயம் என்ன தடுத்துது.எனக்கு அந்த பொண்ணுகிட்ட என்னமோ கேக்கனும்னு தோனுச்சு.ஆனா வார்த்தை வரல,  கொஞ்சநேரம் அந்த இடத்தில ஒரு பெரிய அமைதி யாரும் எதுவும் பேசிக்கல, நா  சுத்தி அங்கங்க பாக்கிற மாதிரி காட்டிக்கிட்டிருந்தாலும்  கடைசியில என் கண்ணு அந்த பொண்ணு பக்கமே போச்சு. அப்ப இராத்திரி11மணி கிட்ட நெருங்கியிருந்தது....

   அந்தநேரத்தில ஒரு பொண்ணு தனியா வெளியில தைரியமா வர்றது  சென்னையில சாதாரண விஷயம்னாலும்  ப்படி அழுதுட்டே வந்தது  பார்க்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா  இருந்துச்சு.என்ன பிரச்சனையா இருக்கும், நா  மனசில நெனைச்சுது  புரிஞ்ச மாதிரி  பேசுனாரு ஸ்டீபன் "எதாவது லவ் மேட்டரா தான்டா இருக்கனும். அவ ஆளு தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேனு சொல்லியிருந்துருப்பான். இப்ப கையும்களவுமா மாட்டிக்கிட்டிருப்பான். அதுதான் அவங்க இரண்டுபேர்க்குள்ள பிரச்சனையாகி  இருக்கும்" அவர் சொல்லி  முடிக்கவும் சரியா மறுபடியும் அந்த பொண்ணு செல்போன்ல ரிங் அடிச்சுது ...

      ஒரு நிமிஷம் .அந்த செல்போ
ன் டிஸ்ப்ளேய பார்த்து யோசிச்ச அந்த பொண்ணு அப்புறம்  என்ன நெனைச்சுதோ தெரியல, அந்த கால்ல அட்டென்ட் பண்ணி பேசினா "ஹலோ எனக்கு கால் பண்ணாதேன்னு சொன்னேன்லடா இப்ப எதுக்கு கால் பண்ற? அவ்ளோதான் நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. நாளைக்கு பாரு எல்லா நியூஸ் பேப்பர்லயும் நா செத்து போயிட்டேன்னு என் போட்டோவோட நியுஸ் வரும் த பார்த்து தெரிஞ்சிக்கோ" முன்னாடி விட இந்த தடவ ரொம்ப சத்தமாவே கத்திட்டு போன்ன  கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ணிட்டா, அப்ப அவளோட அழுகை இன்னும் அதிகமாயிருந்துச்சு...

       அவ பேசினத கேட்ட  எனக்கு ஒரு நிமிஷம்  தூக்கி வாரி போட்ட மாதிரி இருந்துச்சு . ஏதோ விபரீதம் நடக்க போகுதோன்னு ஏன் மனசு படபடனு அடிச்சு
து.நா காதலிக்கிறதுக்கு முன்னாடியே எவ்வளவோ காதல் பிரச்சனைகள்ள பேசியே தீர்த்து வச்சுருக்கேன்.ஆனா இப்புடி சின்ன சண்டையில உயிரை விட போறேன்னு  சொல்லுதே இந்த பொண்ணுன்னு ஒரே யோசனையா இருந்தது.என்ன பண்றதுன்னு தெரியல ,அப்படியே ஸ்டீபன் பக்கம் திரும்பிக்கிட்டேன். 

        "ஹேய் நாளைக்கு பாரு,அவ ஆளுக்கிட்ட பேசிருவா, ப்ரீத்தாவும் அடிக்கடி இப்படித்தான் சாக
ப்போறேனு சொல்லிக்கிட்டேயிருப்பா, அப்படின்னு அவரோட  முன்னால் காதலியை பற்றி ஒரு சிறுகுறிப்பு சொல்லி முடிச்சார் ஸ்டீபன். அவர் காதலிக்கிறத பார்த்துதான் நானெல்லாம் கல்யாணம்னா அது காதலிச்சு தான் பண்ணனும்னு முடிவு பண்ணினேன். ஆனா அவர்  காதல் முறிஞ்சு போய் ரொம்ப வருஷம் ஆகிபோச்சு. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கு.ஆனா இவரு இன்னும் "போனால் போகட்டும் போடா பாட்டுல ஆரம்பிச்சு லேட்டஸ்ட் போ நீ போ வரைக்கும் அத்தனை காதல் பிரிவு பாடல்களையும் போட்டு போட்டு கேட்டுட்டே  இருந்தாரு.அவர் செட் பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணியும் இவர் கல்யாணமே பண்ணாம இருந்தாரு.அவர் அனுபவத்தில சொன்ன விஷயம் சரியா தான் இருக்கும் அப்படின்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும் அந்த பொண்ணு முகத்த பார்க்கும் போது  மனசுகுள்ள லேசா பயமா இருந்துச்சு...

        
 அந்த ஆட்டோக்குள்ள எந்த பக்கமும் திரும்பினாலும் அந்த பொண்ணோட குரல் என்ன டிஸ்டர்ப் பண்ணுச்சு     அந்த பொண்ணு டிரைவர் பக்கம் திரும்பி "அண்ணா சீக்கிரம் வண்டிய நிப்பாட்டுங்க நா இறங்கிக்கிறேன்". அப்படின்னு சொல்லி அவசரமா ஒரு இடத்தில இறங்குனா, எனக்கென்னமோ அவ  இறங்க வேண்டிய இடத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு  இறங்கிருக்குமோனு  ஒரு சந்தேகம். எங்க ஷேர் ட்டோ  கிளம்புச்சு. நான் திரும்பி அந்த  பொண்ணையே  பார்த்துக்கிட்டிருந்தேன்...

       அவ  ரோட்டில எங்க போகனும்னு தெரியாம அப்படியே நிண்ணுகிட்டிருந்தா,அப்ப  மணி 11.30 அந்த ரோட்டில ஆள் நடமாட்டமே இல்ல,என் கண்ணவிட்டு அந்த பொண்ணு மறையுற வரை, நா அவள பார்த்துக்கிட்டே இருந்தேன் அவ அசையாம அதே இடத்திலேயே தான் நின்னா...அவ மனசு எவ்ளோ பாடுபட்டிருக்கும்.அவ உருவம் கொஞ்சம் கொஞ்சமா மறைய  நா பார்த்துக்கிட்டே வந்தேன் அசதியில அப்படியே கண்ணசந்து தூங்கிட்டேன்...

        கொஞ்ச நேரம் ஆயிருக்கும்......

       ஒரு கை வேகமா என் முதுகுல தட்டுச்சு,முழிச்சு பார்த்தா சுத்தியும் "பாம் பாம்"னு பயங்கர சத்ததோட நெறைய வாகனங்கள் 
போய்க்கிட்டிருந்தது. ஒரே புகைவாசனை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் வாசலில இறங்குறோம். நாங்க இறங்கினதும், "சாப்பிட வாரியாடான்னு கேட்டாரு " ஸ்டீபன் "பசியில்லண்ணா, நீங்க சாப்பிடுங்க நா கிளம்புறேன்னு "அவருக்கு பை சொல்லிட்டு, அங்க இருந்து நா கிளம்பி புறநகர் பஸ் நிக்குற இடத்துக்கு போயிட்டேன். வழக்கமா காலைல ஒன்பது மணிக்கு சாப்பிட்டாலே ஒரு மணி நேரத்துக்குள்ள திரும்ப பசிக்க ஆரம்பிச்சிரும் எனக்கு, ஆனா அன்னைக்கு என் வயிறு கப்புன்னு அடைச்சுக்கிச்சு. பசிய மறக்கிற அளவுக்கு நெறைய சிந்தனைகள்,அந்த பொண்ணோட அழுகை சத்தம் மட்டும் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்துச்சு.

       நா 
சென்னை புறநகர்ல உள்ள என் பிரெண்டு ஒருத்தன் கல்யாணத்துக்கு போகவேண்டியிருந்தது.அன்னைக்கு  சாயங்காலம் தான் கல்யாண ரிசெப்ன் முடிஞ்சிருந்தது. மறுநாள் திங்கள் கிழமை காலையில  கல்யாணம். மாப்பிள்ளை ஒரு காலத்தில எனக்கு நெருங்கின நண்பன். அவனுக்கு நா ரிசெப்சனுக்கு வராததுல கொஞ்சம் வருத்தம்தான்....

      எங்க ஊரில எல்லாம் கல்யானம்னா தாலி கட்டறப்பதான் போவாங்க  இங்கதான் முந்தினநாள்  ரிசெப்ன்லையே எல்லாரும் வந்துட்டு போயிடறாங்க. அதனால நா பிடிவாதமா முகூர்த்ததுக்கு தான் வருவேன்னு சொல்லி  ரொம்ப லேட்டா  தான் கிளம்பிருந்தேன். காலைல ஆறு மணிலேயிருந்து ஏழு மணி வரைக்கும் முகூர்த்தம். இராத்திரி ரொம்ப நேரமானதால நா போவேண்டிய ஊருக்கு பஸ்  எதுவுமே இல்ல. கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு...

     எனக்கு என்னமோ அந்த பொண்ணு ஞாபகமாவே இருந்துச்சு. என்னவாயிருக்கும் அவளுக்கு, வீட்டுக்கு போயிருப்பாளா? இல்ல தற்கொலை தாவது? ச்சீ ச்சீ அப்படியெல்லாம் எதுவும் இருக்காதுனு, நானே என் மனச தேத்திக்கிட்டு காத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப பஸ்சுக்கு அப்புறமா வந்த ஒரு ரூட்  பஸ்ல ஏறினேன்.அது பைபாஸ்ல தான் நிக்கும். அங்க இறங்கி நா போகவேண்டிய ஊருக்கு நடராஜா பஸ்தான்... வேற வழியில்லாம கூட்டம் நிரம்பி வழியுற அந்த பஸ்ல ஏற வேண்டியதாயிடுச்சு. ஸ் மெல்ல கிளம்புச்சு டிக்கெட் எடுத்துட்டு நா நின்னுக்கிட்டே தான் போய்கிட்டிருந்தேன்.

     கொஞ்ச நேரம் கூட ஆகல  லேசா கண்ணு சொக்குச்சு,எல்லாம்  அப்படியே மறையுது, திடீர்னு  ரு போன் "சார் ரஜினி வந்துட்டாரு அந்த மேனேஜர் என்னை கூப்பிட்டு சொன்னாரு, அம்மாவோட குரல் இட்லி ரெடியா இருக்குடா சாப்பிட்டுட்டு போ,ஹே பார்த்து போ இடிச்சுற போகுதுடா என் நாலாங்கிளாஸ் கிளாஸ்மேட் லக்ஷ்மணன் கத்துறான், சொல்லி முடிப்பதற்குள் எதிரே உள்ள மரத்துமேல மீது தூக்கி வீசப்பட்டு அலறுனேன், சம்பந்த சம்பந்தமில்லாம என்னலாமோ காட்சிகள் தோனுச்சு .என் முன்னாடி அந்த பொண்ணு அழுதுக்கிட்டே நிக்கிறா. ஒரு பயங்கர சத்ததோட ஷாக்காகி முழிச்சா, பஸ்ல என்னை தவிர எல்லாரும் நல்லா தூங்கிட்டிருக்காங்க, "நம்ம நினைவு பதிவுகள் தான் நமக்கு வர்ற கனவுகள்னாலும், நம்ம ஒவ்வொரு கனவுகளையும்  சரியா கோர்வையாக்கினா ஒரு திரைப்படத்துக்கு அருமையான திரைக்கதை பண்ணிரலாம் போல," நல்லவேளை நா போட்ட சத்தத்தில அந்த பஸ்ல யாரும் தூக்கம் கலைஞ்சு முழிக்கல, அதுக்கப்புறம் எனக்கு தூக்கமே வரல, அரைமணிநேரம் அப்படியே போச்சு. நா இறங்க வேண்டிய ஸ்டாப்பும்  வந்துடுச்சு. இறங்கி கல்யாணமண்டபத்து கிட்ட கொஞ்சதூரம் நடந்துருப்பேன்.

    அந்த பைபாஸ் ரோட்டில என்ன கடந்து  நைட் ரௌண்ட்ஸ் போய்க்கிட்டிருந்த  ஹைவே பேட்ரோல் வண்டி  ஒண்ணு  சடன் பிரேக் போட்டு என் பக்கத்தில நின்னுச்சு.அதுல மொத்தம் மூணு  போலிஸ்காரங்க இருந்தாங்க, முன்னாடி உட்கார்ந்திருந்த எஸ்.ஐ. என்ன கூப்பிட்டார். "சார் என்னவிஷயம், எங்க போறீங்க?" வழக்கமான விசாரிப்புகள் தான். நா என் ஆபிஸ் ஐ.டிகார்ட் காட்டி என் பிரெண்டு  கல்யாணத்துக்கு போய்கிடிருக்கேன்ங்கிறத புரிய வச்சுட்டு இருந்தேன்...

    அப்ப அந்த வண்டியில இருந்த ஓயர்லஸ்ல பீப் ஒலிக்கு பின்னாடி ஒரு குரல் "கோயம்பேடு பக்கம் ஒரு பொண்ணு டெத் ஓவர்......  சூசைடு பண்ணி இறந்து போயிருக்கு,ஒரு செல்போன் மட்டும்தான்  இருக்கு ஓவர்..." என தகவல் வந்து பீப் ஒலி நின்னுடுச்சு.எனக்கு பதட்டம் இன்னும் அதிகமாச்சு.எனக்கு நானே கேட்டுக்கிட்டேன் "நா வந்த ரூட்டுல தான் சூசைட் நடந்துருக்கு ஆட்டோல இருந்து  அழுதுட்டே இறங்கி போச்சே அந்த பொண்ணுதானா?" என்கிட்ட  விசாரிச்ச  போலிஸ்காரர்க்கிட்ட அந்த பொண்ண பத்தி விளக்கம் கேட்கலாம்னு  நினைக்கும் போதே, என் விசாரிச்ச  எஸ்.ஐ. "தம்பி நீங்க வெளியில ரொம்ப நேரம் நிக்காம சீக்கிரம் மண்டபம் போய் சேருங்கனு" சொல்லிட்டு அந்த டிரைவர்கிட்ட சைகை காட்ட, அந்த ஹைவே  பெட்ரோல் வண்டி வேகமா கிளம்பிடுச்சு. 

      எனக்கு ஒண்ணுமே ஓடல,என் கூட வந்த பிரெண்டு ஸ்டீபனுக்கு போ
ன் அடிக்கிறேன் அவர் என் போன் கால் அட்டென்ட் பண்ணல,ரொம்ப நேரம் அந்த தேசிய நெடுஞ்சாலையில் நின்னு வானத்தையே வெறிச்சு  பார்த்துக்கிட்டிருந்தேன்,நிலா நட்சத்திரம் எல்லாம் அங்கங்க அப்படியே தான் இருந்துச்சு.என் எண்ணங்கள் தான் எங்களாமோ போச்சு...

     "எல்லா  காதலியும்  காதலனை ஏமாத்துறதில்ல, எல்லா  காதலனும்  காதலிய ஏமாத்துறதில்ல அவங்களுக்குள்ள அப்பப்ப சில சண்டைகள் வரும் போகும்.ஆனா இப்படி சின்ன விஷயத்துக்கு போய் உயிரை விட்டுட்டுச்சே இந்த பொண்ணு, அவளுக்கு சென்னைதான் சொந்த ஊரா? இல்ல வேற எந்த ஊரோ? சென்னைக்கு படிக்க வந்துருப்பாளா? இல்ல வேலைக்காக வந்தவளா? அவ அப்பா அம்மாக்கு இந்த தகவல் தெரிஞ்சா என்னாவாங்க? எனக்கு ஒரே குழப்பம்,....

       காதலில் நேர்மை எவ்வளவு முக்கியம்.அந்த பையனின் நேர்மையின்மை தான்  இந்த பொண்ணோட உயிரை பறிச்சுடுச்சு" எவ்வளவோ கேள்விகள், விமர்சனங்கள் என்னை துளைத்தெடுக்க மௌனமா நடந்தே கல்யாண மண்டபம் போய் சேர்ந்தேன்.சிலமணி நேரங்கள் ஓடிபோச்சு.

        திங்கள்கிழமை.. 

      மணி அதிகாலை மூன்று மணிக்கு மேல இருக்கும்..

     கண்ணை மூடினா அந்த பொண்ணோட முகம் மட்டும் தான் ன்  ஞாபகத்துக்கு  வந்துச்சு."காதல் தோல்வினாலயோ இல்ல வேற பல பிரச்சனைகளாலயோ ஊட்டி,கொடைக்கானல் மாதிரி இடங்களின் தற்கொலை பாறைகள்ல ,ஊருக்கு வெளிய இருக்கிற குளங்கள்ல, ஊர் ஒதுக்குபுறமா இருக்கிற கிணறுகள்ல ஆறுகள்ல எல்லாம் விழுந்து இறந்தவங்க, மரங்கள்ளையும், வீட்டு உத்திரத்தில் தூக்கில் தொங்கினவங்க, பாகற்காய் சாப்பிடவே கசப்பு என ஒதுக்கினவங்க எல்லாம்  எலி மருந்தையும் இன்னும் பிற வஸ்துக்களையும் சாப்பிட்டு  உயிர்விட்டவங்க,சின்ன காயம்பட்டா கூட தாங்காத பலபேர் தீக்குளித்து  இறந்துருப்பாங்க,இப்படி என் பக்கத்து வீட்டில,அடுத்து தெருவில,என் ஊரில ஏன் இன்னும் எங்கெங்கோ நடந்த விபரீதங்களை பலதடவை கேள்விப்படும்போதும் சரி, எங்கையோ பேப்பரில் இதுமாதிரி தற்கொலை இறப்பு செய்திகளை அப்பப்ப  படிக்கும்போதெல்லாம் ரொம்ப சாதாரனமா அத கடந்து போயிருக்கேன்.ஆனா அன்னைக்கு என்னால ஏனோ முடியல.

    மறுநாள் காலைல விடிஞ்சது. என் நண்பன் திருமணமும் நல்லபடியாக 
முடிஞ்சது. அதிகநேரம் அங்க இருக்கல, கிப்ட் மட்டும் கொடுத்துட்டு, நான் என் ஊருக்கு கிளம்ப தயாராயிட்டேன்.பஸ் ஏறி கோயம்பேடு பஸ்டாண்ட் வந்தேன்.சாப்பாடு ஒரு வாய் இறங்கல, தண்ணீ மட்டும் இரண்டு,மூணு அதக்கும் மேல பாட்டில் பாட்டிலாக வாங்கி குடிச்சு காலி பண்ணிக்கிட்டிருந்தேன்...

   அன்னைக்கு காலை செய்தித்தாள் சிலத வாங்கி படிச்சேன்.எல்லாத்திலையும் அந்த பொண்ணோட  தற்கொலை செய்தி பெரிசா வந்திருந்தது.பாலத்தில் இருந்து குதித்து இறந்திருந்ததுனும் ,மூளை சட்டினி ரத்த வெள்ளம் என வார்த்தைகளில் விளையாடிருந்தாங்.செய்தியோட போட்டுருந்த புகைப்படத்தில் முகம் மட்டும் தான் இருந்துச்சு ,ரத்தம் படிந்திருந்த அந்த பெண்ணின் முகம் சரியா தெரியல.அவளின் டிரெஸ் கலரோ வேறு எந்த அடையாளங்களோ அந்த பேப்பர் செய்தில இல்ல,அந்த பெண்ணின் செல்போனில் சிம்கார்ட் எதுவும் இல்லாததால் உறவுகளுக்கு தகவல் சொல்லமுடியவில்லை. என்ற விஷயம். என் இதயத்தை மேலும் கணமாக்கிடுச்சு.

    அந்த பொண்ணு சாகுறதுக்கு முன்னாடி என்ன நெனைச்சுருக்கும்" சாகுற வயசா இது , எத்தனை பேரோட கனவுகள் இருந்துருக்கும் அந்த பொண்ணு மேல.... கடைசியா அவ முகம் கூட சரியா தெரியலியே அந்த பொண்ணு முகத்த கொஞ்சம் கொஞ்சமா ஞாபகபடுத்தி பார்த்தேன்...முடியல...

     இப்ப போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுருக்குமா?

     இந்த சாவ வச்சு இன்னும் என்னன்னா கதை கட்ட போறாங்களோ தெரியலியே,

     அந்த பையன். ????...

     ஒட்டுமொத்தமா காதலர்கள் நாளே இப்படித்தான்னு ஆயிரும்ல...

      நானே தனியா புலம்ப ஆரம்பிச்சிட்டேன்...
       
       நாலு மணிநேரம்  பஸ் ஸ்டாண்டிலேயே ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன், எங்கயும் போகல , எனக்கு வந்த எந்த போ
ன் காலயும் எடுக்கல. ஸ்டீபன்,ஆபிஸ் கால், அவக்கிட்ட மட்டும் இருபது மிஸ்டு கால். பத்து மெஸ்சேஜ் எதுக்கும் ரிப்ளை பன்னால...

          சாயங்காலம் 5 மணி... 

      சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி செல்லும் இரண்டு  பஸ்  என் முன்னால நின்னுச்சு. அன்னைக்கு வார நாள்ங்கிறதுனால கூட்டம் கொஞ்சம் குறைவு தான், அதான் இரண்டு பஸ் கண்டக்டர்களும் கூவி  கூவி எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. நா தான் முதலில் டிக்கெட் வாங்கி அந்த பஸ்சில் ஏறி உட்கார்ந்தேன்...

     எனக்கு வலது பக்கம் இரண்டாவது ஜன்னல் ஓர சீட். பஸ் உள்ள இருந்த வெறுமையை பார்க்க பிடிக்காமல் ரொம்ப நேரத்திற்கு பிறகு வெளியில வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.அந்த பேருந்து நிலையம் அதோட வழக்கமான பரபரப்பு குறையாமலே இருந்தது.சொந்த ஊருக்கு போகிற சந்தோசம் சிலர் முகத்தில, சொந்த ஊர விட்டு போற வருத்தம் சிலர் முகத்தில, பல உணர்வுகள் கலந்த கலவையா அங்க இருந்த கதாபாத்திரங்கள் எல்லாரையும் உற்று கவனிச்சா சுவாரசியத்துக்கு குறைவிருக்காது மற்ற நேரம் இதெல்லாம் கவனிக்கிறவன் தான் நா, ஆனா அன்னைக்கு என்னால எதையும் சிந்திக்க முடியல...

       வாசல்ல நின்னு இன்னும் பத்து நிமிஷத்தில வண்டி கிளம்பிருமுன்னு கண்டக்ட்டர் கத்திட்டே இருந்தாரு. அப்படியே சில பல பத்து நிமிஷம் ஓடிடுச்சு.உள்ள இருந்து "வண்டிய சீக்கிரம் எடுங்க நாளைக்கு வேலைக்கு போகனும்ப்பானு" யாரோ சத்தம் கொடுக்க, சில நிமிடங்களில் ஒரு இருபது இருபத்தைந்து ஆட்களோடு அந்த அரசு பஸ் அதோட பயணத்தை தொடங்குச்சு.

       ஆடி அசைஞ்சு மெதுவா கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல இருந்து வெளியில் வந்த அந்த பஸ்,கொஞ்ச தூரம் போயிருக்கும் ஒரு டிரா
பிக் சிக்னலில் நின்னுது.அப்ப ஜன்னல் வழியா நா வெளியில பார்த்த காட்சி எனக்கு ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்துச்சு சிரிப்பு,அழுகை தெல்லாம் கடந்த ஒரு மாதிரியான மனநிலை, நா பார்த்தது அந்த பொண்ண... 

photo

      எனக்கு நல்லா தெரியுது. ஆமா அது அந்த பொண்ணு தான்,ஒரு பையன் கூட பைக்ல பின்னாடி உட்கார்ந்து சிக்னல்ல அந்த ரோ கிராஸ் பண்றதுக்காக காத்துக்கிட்டிருந்தாநேத்து என் முன்னாடி ஷேர் ஆட்டோவில வச்சு போன்ல அழுது சண்டை போட்டு திடீர்னு இறங்கி போச்சே, நிச்சயமா அதே பொண்ணு தான்.இப்ப உயிரோட என் கண் முன்னாடி, அதுவும் பைக்ல ஒரு பையன்  பின்னாடி சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே உட்கார்ந்திருக்குறா...
  
   அப்ப  காலைல பேப்பர்ல இறந்து போனதா செய்தி போட்டிருந்ததே  அது இவ இல்லையா? அப்டின்னா அந்த பொண்ணு யாரு?அவளுக்கு  என்ன பிரச்சனை? அ  எதுக்கு தற்கொலை பண்ணிக்கிட்டா? இப்ப  என் கண் முன்னாடி நிக்கிற பொண்ணு கூட இருக்கிறது யாரு? நேத்து சண்டை போட்ட லவ்வரா? இல்ல இது  வேற பையனா? கேள்விகள் அடுக்கடுக்கா வந்துக்கிட்டே இருந்துது எனக்கு, அதுக்குள்ள என் பஸ் அந்த இடத்த விட்டு நகர்ந்துடுச்சு.அந்த ஜோடியும் வேகமாக அந்த ரோட்டில வேற பக்கமா திரும்பி போய் என் கண்ணை விட்டு  மறைஞ்சுட்டாங்க.

      அந்த பொண்ணோட பெயர் கூட எனக்கு தெரியாது ஆனா அவளோட உருவம் மட்டும் என் மனசில ஆழமா பதிஞ்சுருந்தது.எனக்கு ப்பதான் நிம்மதியா இருந்துச்சு.ஏதோ சாதிச்சுட்ட மாதிரி ஒரு உணர்வு சொல்லமுடியாத சந்தோஷம். கடவுளே நன்றி,அப்டி இப்படின்னு ஒவ்வொன்னா யோசிச்சுக்கிட்டே இருக்கும்போது மனசுக்குள்ள எங்கேயோ எப்பயோ படிச்ச ஒரு வாசகம் மட்டும் திரும்ப திரும்ப வந்துபோச்சு "தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ஏன் வாழ்ந்துபார்க்க கூடாது"...
         
இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் ஏப்ரல்-15 -2012.

Thursday, March 22, 2012

"மூவாயிரம்மம்ம்ம்ம்"

             டங்........ டங்.......... டங்னு ...........பெரிய சத்தத்தோடு ஒரு மூட்டை அந்த பச்சை பெயின்ட் அடிச்ச ஓட்டு வீட்டு மாடியில இருந்து ஒவ்வொரு படியா உருண்டு வர வர அந்த காம்பவுண்ட்ல இருக்கிற ஓவ்வொரு வீட்ல இருந்தும் மனுசாளுங்க வெளியில வர்றாங்க.....

         அந்த வீடு நூறு வருஷம் பழையது.அதோட கருங்கல்படிகள்ல உருண்டு வர்ற அந்த மூட்டையில இருந்து வெளியான சத்தம் சுத்தியுள்ள எல்லா சுவர்கள்ளையும் மோதி எதிரொலிச்சு காம்பவுண்டுக்கு வெளிய வர கேட்குது. அங்க சுத்திக்கிட்டிருந்த தெருநாய்கள் கூட அந்த சத்தத்த கேட்டு குரைக்க ஆரம்பிச்சுடுச்சு.......

           "ஏண்டி மதி இவ்ளோ பெரிய பிள்ளையா வளந்துருக்க ஒரு பொருள பார்த்து கொண்டு வரமாட்டியா? என்ன இருக்கு இந்த சாக்கில" சொல்லிக்கிட்டே மூட்டைய பிரிக்க போறாங்க குச்சி வீட்டு வள்ளி ஆச்சி..

            மாடியில இருந்து குடுகுடுன்னு இறங்கி வர்ற மதி அந்த மூட்டைய மெதுவா கையில எடுத்துட்டு அந்த இடத்த விட்டு நகர பார்க்கிறா, விட்டுருவாங்களா நம்ம ஆளுங்க, மாறி மாறி ஒவ்வொருத்தர்க்கிட்டயிருந்தும் வரிசையா ஒரு கேள்வி வருது. ஆனா எல்லா கேள்விகளோட அர்த்தமும் அந்த மூட்டைகுள்ள என்ன இருக்கு? அத எங்க கொண்டு போறா? அப்படின்னு தான் இருந்தது.

             மதி எல்லாரையும் ஒரு முறை சுத்தி பார்த்துட்டு அவ நாலு மணிநேரத்துக்கு முன்னாடியே  யோசிச்சு வச்சிருந்த அதே பதில வரி மாறாம சொல்ல ஆரம்பிக்கிறா, "இந்த குத்துபோனியில ஓட்டை இருக்கு.அதான் பாத்திர கடையில போட்டு வேற பொருள் எடுக்கலாம்னு மூட்டையில கட்டிட்டு எடுத்துட்டு போறேன்"... அப்படி சொல்லிட்டு யார் பதிலையும் எதிர்பார்க்காம அந்த இடத்த விட்டு கிளம்பிட்டா...

            இந்த மாதிரி சிற்றூர்கள்ல இருக்கிற நடுத்தர மக்கள் வாழுற காம்பவுண்ட் வீடுகள்ல எந்த வீட்டுக்கும் தெரியாம யாரும் ஒரு குண்டூசிய கூட வீட்டுக்குள்ளையோ இல்ல வீட்டில இருந்து வெளியையோ எதையுமே எடுத்துட்டு போக முடியாதுங்கிறப்போ இவ்ளோ பெரிய குத்துபோனிய மட்டும் மூட்டைகட்டி லேசில கொண்டு போயிர முடியுமா?ஆனா மதி புத்திசாலித்தனமா சமாளிச்சுட்டா..எல்லாரும் அவளையே பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சும் வேகமா வெளியில வந்து அங்க ஏற்கனவே பின் வாசல் வழியா பைக்கில வந்து காத்துக்கிட்டிருந்த அவங்க அண்ணன் கூட ஏறி கிளம்பிட்டா.....

           மதி வீட்டில் நான்கு மணி நேரத்திற்கு முன்பு ....

         "சே எரிச்சலா வருது எப்ப பார்த்தாலும் பணம் பணம்னு ஒண்ணும் வாங்க முடியல, ஏன் தான் நம்ம வீட்ல மட்டும் இப்படி கஷ்டமாகுதோ... அம்மா கையில் அம்பது ரூபா தான் இருக்கு இன்னிக்கு தேதி 21 தான், இன்னும் 10  நாள் கெடக்கு! இந்த மாசம் முடிய....." புலம்பிக்கிட்டே அடுப்பாங்கரையில இருந்து தோசைய கொண்டு வந்து அவ அண்ணன் தட்டுல போட்டா மதி 

        பாதியில் அவ பேச்ச மறிக்கிற அவ அம்மா "ஏட்டி அவன் என்ன செய்வான் யார்கிட்ட போய் காசு கேப்பான்? அவனும் மாசம் மாசம் சம்பளம் வாங்கி வீட்டுக்கு ஒழுங்கா காசு குடுக்கத்தான செய்யுறான். நமக்கு மட்டும் எப்புடி தான் காசு காலியாகுதோ தெரியல, ரெட்டியார் அம்மாகிட்டயும் வட்டிக்கு காசு கேட்டு பார்த்துட்டேன் இப்போதைக்கு  இல்லேன்னுட்டாங்க. நா என்ன செய்ய கவலப்படாத நம்ம அப்பா தெய்வமா இருந்து எதாவது வழி விடுவாவ " அந்த வாரியல எடுத்து போடு, நா புறவாசல போய் தூத்துட்டு வாரேன்னு சொல்றாங்க"
     
      வாரியல எடுக்க பரண்ல கைய விடுற மதிக்கு லேசா தட்டுப்படுது அந்த குத்துபோனி சந்தோசம் தாங்கல வாரியல விட்டுட்டு போனியோட பட்டாளைக்கு வர்றா "யம்மா இது பித்தள தான எதுக்கு இத சும்மா போட்டு வச்சுருக்க எடைக்கு போட்டுருவோமா அப்படிங்கறா"

      " ஏ புள்ள அது எனக்கு சீதனமா வந்ததுடி,உன் கல்யாணத்துக்கு பாத்திரம் வாங்குறப்ப அத வித்து வாங்கனுன்னு நெனைச்சு போட்டு வச்சுருந்தேன். சரி உனக்கு வேணுமுனா அத போட்டுட்டு வந்துரு, ஆனா அந்த கண்ணா கடைக்கு மட்டும் போகாத, இத்துனியோண்டு கொலுசையே எடை ஏமாத்தி கம்மி காச குடுத்துபுட்டான்.வேற கடையில போய் குடுன்னு சொல்றாங்க" மதி அம்மா.

      இதெல்லாம் தோசைய பிச்சு தின்னுக்கிட்டே வேடிக்கை பார்த்துகிட்டிருந்த மதியோட அண்ணன் முந்திக்கிட்டு சொல்றான் "யம்மா நீயும் மதியும் ஒரு ஆட்டோ பிடிச்சு போய் அத வித்துட்டு வந்துருங்க என்னல்லாம் போக சொல்லாதீங்க"

      அம்மா இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கும்முனு நெனைக்காத மதி சந்தோசத்தில சொல்றா "யம்மா நா டவுனுக்கு அண்ணன் கூட போய் இத எடைக்கு போட்டுறேன், நீ வந்து கஷ்டப்பட வேண்டாம். எப்படியும் மூவாயிரத்துக்கு மே​ல கிடைக்கும்னு நெனைக்கிறேன்மா"

      அவ சொன்னதும் தான் தாமதம் மூணு பேரும் அவங்க அவங்க தேவைகள சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...

      அவ அம்மாக்கு கோவில்ல பூஜைக்கு குடுக்கணுமாம்.அப்புறம் மிச்சநாளுக்கு பலசரக்கு சாமானும் வாங்கனுமாம். 

      அவ அண்ணனுக்கு "கையில ஐநூறு ரூபா குடுத்துருங்க போதும். வேற எதுவும் கேக்கமாட்டேனு" சொல்லிட்டான்...

       மதிக்கு செல்போன் ரீசார்ஜ்க்காரனுக்கு கொடுக்க வேண்டிய கடன் அடைக்கணுமாம்.காலேஜ்ல ஸ்பெஷல் பீஸ் வேற கட்டணுமாம். 

தேவைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

      எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போதே அந்த பித்தளகுத்துபோனிய வித்துறலாமுனு முடிவு பண்ணி தூசி தட்டி துடைச்சி வைக்கிறா மதி.

        ரொம்ப நேர யோசனைக்கு அப்புறமா வேற வழியில்லனு முடிவு பண்ணி ஐநூறு ரூபாய்க்கும் ஆசைப்பட்டு நானே கூட்டிட்டு போறேன் கிளம்பு மதின்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டான் அவ அண்ணன்.

          அம்மா ஒரு பிரச்சனை இருக்கே மதியே சொல்றா, இந்த பக்கத்து வீட்டுக்காரிகளுக்கெல்லாம் தெரிஞ்சா அவமானம் மா. யாரவது கேட்டா என்ன சொல்ல, எப்படி சமாளிக்க இத பத்தியே மூணு மணி நேரம் ஐம்பத்தி ஒன்பது நிமிடங்கள் பிளான் பண்ணி அந்த பித்தள போனிய ஒரு சாக்குல போட்டு தான் எடுத்துட்டு வந்தா கை தவறி விழுந்து அது இப்புடி பார்க்காதவங்கள எல்லாம் வீட்டுக்கு வெளிய வர வச்சு கேள்வி கேக்க வச்சுடுச்சேனு ஒரு வருத்தம் இருந்தாலும் "எங்க வீட்டு பொருளு நாங்க என்ன பண்ணினா எவனுக்கு என்ன? கண்டவங்களுக்கு நா ஏன் பயப்படனும்னு"புலம்பிக்கிட்டே தான் போறா...

         தெருவெல்லாம் இவ வண்டியில் கொண்டு போற மூட்டைய பார்த்து தெரிஞ்ச ஆளுக கேக்குற பல கட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி அவ அண்ணன் கூட டவுனுக்கு பைக்கில போய்க்கிட்டிருக்கா...

          ரோட்டில இரு சக்கர வாகனத்தில போற யார் முகத்தையுமே பார்க்க முடியல, வேற ஒண்ணுமில்ல போன ஒண்ணாம் தேதில இருந்து இந்த ஊரில ஹெல்மெட் கட்டாயம் ஆக்கிட்டாங்க அதான் இப்புடி,ஆனா சட்டம் போட்ட நெறைய போலிஸ்காரங்க ஹெல்மெட் இல்லமாலே அவங்க டூவீலர்ல போறாங்க....

         ஏண்டா இவங்கலாம் ஹெல்மெட் போடமாட்டங்களா? மதி வாய திறக்கவும் "கொஞ்சம் பேசாமா வாரியா" கத்திட்டு அமைதியாயிட்டான் அவ அண்ணன்..  

           அதுக்கப்புறமும் அடங்காம ஏதாவது பேசிட்டே வர்ற மதி,ரோட்டோட ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துட்டே போறா,இவ்வளவு பெரிய மூட்டைய தூக்கிட்டு போற இவங்க ரெண்டு பேரையும் ஊரே வேடிக்கை பார்த்துட்டு போகுது...

          ரெட்டபாலம் ஏறி இறங்கியாச்சு சுவாமி சன்னதி ரோடையும் நகைகார வீதின்னு மாத்திரலாம் போல ரெண்டு பக்கமும் கேரளா ஆந்திரா வடமாநிலம்ன்னு எல்லா ஊர்காரங்களும் புதுசா புதுசா நகை கடை திறந்துட்டு இருக்காங்க,இவங்க டவுன் வந்த நேரம் இன்னிக்கு அங்க ஒரு நகை கடை திறப்பு விழா யாரோ ஒரு பழைய சினிமா நடிகை இப்ப சீரியல்ல மட்டும்தான் நடிக்கிறாங்க, அவங்க அந்த கடை திறந்து விட வந்துருக்காங்க.அதுக்கே கூட்டம் பாதி ரோட்ட அடைச்சிகிட்டு டிராபிக் ஜாம்... அதனால மதியும் அவ அண்ணனும் காத்திருக்க வேண்டியாதாயிடுச்சு ...  

       "ஒரு பக்கம் புதுசு புதுசா நம்ம ஊர்ல திறக்கிற நகை கடையில்ல நகை வாங்க கூட்டம் மொய்க்குது இன்னொரு பக்கம் நம்மள மாதிரி வீட்டில மிச்சம் மீதி இருக்கிற பாத்திரத்த கூட விற்க அலைய வேண்டியிருக்கு"  அவ அண்ணன் பதில எதிர்பார்க்காம சொல்லி முடிக்கிற மதி பளபளக்கிற நகைகள்ள ஒரு ஏக்கத்தோட கண்ணாடி வழியா பார்த்துகிட்டே அவ கழுத்தில கிடக்கிற கவரிங் செயினையும் பார்க்கிறா ஏதோ புரிஞ்சவ மாதிரி அவ முகத்த எதிர் பக்கம் திருப்பி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டா...

          ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் அந்த ரோடே ஸ்தம்பிச்சு போச்சு.ஒருவழியா அந்த நடிகை டாட்டா காட்டிட்டு போன பிறகு தான் போக்குவரத்து காவலர்கள் டிராபிக் கிளியர் பண்ணினாங்க...அங்கே இருந்து புறப்பட்டு கோவில் வாசல் வந்துட்டாங்க.அங்க இருக்கிற பிரபல சைவ ஹோட்டலுக்குள்ள சாப்பிட போற மாதிரி போய் அங்க உள்ள பைக்க பார்க்கிங்க்ல நைசா வண்டிய பார்க் பண்ணிட்டு மூட்டையோட வெளிய வர்றாங்க....

          ஜஸ்டு மிஸ் ஹோட்டல் செக்கியூரிட்டிக்கிட்ட மாட்டாம வந்துட்டாங்க."ஏல ஆட்டோவில போனா மூண்ணூறு ரூபா பாரு, உன்ன கூட்டிட்டு நம்ம பைக்கிலையே வந்து காச மிச்சப்படுத்திட்டேன் எப்புடி ஏன் ஐடியா" மதி சொல்லிக்கிட்டிருக்கும் போதே கடைதெரு வந்துருச்சு. டவுண்ல அந்த தெரு முழுக்க பாத்திரக்கடைகள்தான், ஒரே பேர்ல நாலைஞ்சு கடை கூட இருக்கும்.

         எந்த கடைக்குள்ள போகலாமுன்னு கொஞ்சம்நேரம் யோசிச்சு முடிவு எடுத்து ஒரு கடைக்குள்ள போறாங்க மதியும் அவ அண்ணனும், "வாசல்லையே வாங்க வாங்கனு சொல்ற அந்த கடையாளு, இவங்க முகத்த பார்த்ததுமே பழைய பாத்திரம் எடைக்கு போட்டு விற்க வந்தவங்கன்னு கண்டுபிடிச்ச மாதிரி அவங்க கையில இருந்து மூட்டைய வாங்கி எடைமிஷின்ல வச்சு எடைய பார்த்துட்டாரு..

           மதி அண்ணன் லேசா பேச்சு கொடுக்கிறான் "நல்ல குத்துபோனி ஒரு ஓட்டை கிடையாது சார். வீடு காலி பண்றோம் பழைய பொருளு சும்மா இடத்த அடைச்சுட்டு கிடந்தது.இத மாதிரி நம்ம வீட்டில ரெண்டு மூணு குத்துபோனி கிடக்கு" அதான் எடைக்கு போட்டுறலாமுன்னு வந்தோம்ங்கிறான்."

          "நாலரை கிலோ இருக்கு பா வேற பொருள் எதாவது வாங்குறீங்களா இல்ல காச வாங்கிட்டு போறீங்களானு கடையாளு அவன் மனச படிச்ச மாதிரி கேக்குறாரு" பொருள எடைக்கு போட்டுட்டா வேற பொருள் தான் தருவாங்க காசெல்லாம் தரமாட்டங்க,அதான் வழக்கம் எப்புடி சொல்லி விற்க போறோமுன்னு குழம்பி நின்ன மதிக்கும் அவங்க அண்ணனுக்கும் கொஞ்சம் சந்தோசம் தான்..

       அதுக்குள்ள அங்க கல்லாவில உட்கர்ந்துக்கிற ஆளு ஏதோ கணக்கெல்லாம் போட்டு "ஒரு கிலோ 290 க்கு போகுது. மொத்தம் 1150 ரூபா வருது பா, நம்ம கடையில தான் அதிகமா கொடுக்கிறோம். தம்பி எடுத்துக்கலாமா?" அப்படிங்கறாரு...

         ஒரு நிமிஷம் சார்னு சொல்லிட்டு வெளியில வந்து நின்னு பேசுற மதியும் அவ அண்ணனும் அவங்க அம்மாக்கு போன் பண்ணி இவ்ளோ விலை தான் போகுதுமானு சொல்லிட்டு ஏதோ முடிவெடுத்துட்டு கடைக்குள்ள வர்றாங்க, "சார் அப்புறம்  வர்றோம்னு "அந்த குத்துபோனிய தூக்கிட்டு வெளியில வந்துட்டாங்க...

       அப்புறம் ஒரு மணி நேரமா அந்த ரத வீதி முழுக்க இருக்கிற எல்லா பாத்திர கடைகள்லையும் ஏறி இறங்கி சுத்தின பிறகு தான் ஒவ்வொரு கடையோட வியாபார தந்திரங்கள்,பேரங்கள் எல்லாம் புரிஞ்சி எல்லா கடையிலையும் பாத்திரம் எடைக்கு போட்டா பொருள் வாங்காம காச மட்டும் குடுக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சிகிட்டு ஆரம்பிச்ச கடைக்கே வந்து நிக்கிறாங்க...

       வெயில்ல அலஞ்சதுல கையில மிச்சம் இருந்த இருபது ரூபாய்க்கு சர்பத் வாங்கி குடிச்சிட்டாங்க.இப்ப இந்த கடையில ஏற்கனவே சொன்ன விலை கொடுத்தாபோதும்னு நெனைச்சிகிட்டே உள்ள நுழையுறாங்க...    

       "நீங்க வருவீங்கன்னு தெரியும் தம்பி. இதச் சொல்லிக்கிட்டே அந்த கடையாளு அவங்க கையில இருந்த மூட்டைய வாங்கி அதுக்குள்ள இருக்கிற பித்தள போனிய எடுத்து அடுத்த விற்பனைக்கு பாலிஷ் போட அனுப்பி வைக்கிறாரு. 

                                   

        தலைய குனிஞ்சிக்கிட்டே நிக்கிற மதிகிட்டையும் அவ அண்ணன்கிட்டையும்"அடிக்கடி வரணும் தம்பின்னு சொல்லிகூட ஐம்பது ரூபா வச்சுகோங்கனு குடுத்து வழி அனுப்புறாரு" அந்த பாத்திரக்கடை கல்லாவில உட்கார்ந்திருக்கிற ஆளு...

          வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்த மதியும் அவ அண்ணனும் எதுவுமே பேசாமல் "அந்த ஆயிரத்தி இருநூறு ரூபாவ ஆச்சிரியமா பார்த்துகிட்டே பைக்கில ஏறி வீட்டுக்கு கிளம்புறாங்க...."
                              
        இப்படிக்கு 
திருநெல்வேலியிலிருந்து மு.வெங்கட்ராமன் மார்ச்-21 -2012 

Saturday, December 24, 2011

"தமிழ் சினிமா 2011"

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது.அதுல பாடல்கள் இல்லாம சண்டைகள் இல்லாம பல்வேறு நாட்டோட பல மொழிகள்ல வந்திருந்த படங்கள சப் டைட்டில தாண்டி பல உணர்வுகள உள்வாங்கி பார்த்தது ஒரு புதிய அனுபவமா இருந்தது. அதை வார்த்தைகளால விவரிக்கிறது கடினம் சென்னையில வருடத்திற்கு ஒரு முறை வர்ற இந்த விழாவ தமிழகத்தில சினிமா ஆர்வலர்களா தங்கள நெனைக்கிற எல்லாருமே கண்டிப்பா கலந்துகிட்டு பார்க்கணும். நாலு ஸ்டார் படங்கள முதல் நாள் பார்த்தா ஆகுற செலவு தான் இங்க ஒன்பது நாட்கள் மொத்த படங்களையும் பார்க்குறதுக்கு ஆகுது. சில இந்திய மொழிப் படங்கள் திரையிடப்படும் போது அதில பணியாற்றின கலைஞர்கள்கிட்ட உரையாடி பல விஷ்யங்கள தெரிஞ்சிக்கிற வாய்ப்பும் கிடைக்குது.


ஆனா இந்த வருஷம் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்து வைக்கல, நா திருநெல்வேலியிலேயே என் வேலைய தொட்ரறதுனாலயும்,சென்னையில இருக்கிற பல நண்பர்களோடையே தொலைபேசி புண்ணியத்தல தான் உறவே தொடருதுங்கிறதாலயும். இந்த வருஷம் தமிழ் சினிமால எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் என்ன பாதிச்ச சில படங்கள் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள், இயக்குனர்கள், எல்லாரையும் பத்தி கொஞ்சம் சுருக்கமா திரும்பி பார்க்கிற மாதிரி சில விசயங்கல பகிர்ந்துக்குறேன் படிச்சு உங்க கருத்துக்கள பகிர்ந்துக்கனுமுனு கட்டாயமா கேட்டுக்குறேன்.


சினிமா:-2011





நடிகர்கள்:-1

நிழல் கதநாயகர்களே நிஜ கதாநாயகர்களாக இன்னும் திரையில் தோன்றி கொண்டிருக்க முடியாது. மாஸ் ரசிகர்கள் குறைந்து கிளாஸ் ரசிகர்கள் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்கிற இன்றைய தமிழ் சூழலை தமிழ் சினிமா கதாநாயகர்கள் உணர தொடங்கிய வருடம் 2011 . உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமலின் படங்கள் இந்த வருடம் இல்லாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் மற்ற எல்லா முன்னணி நாயகர்களின் படங்கள் வெளிவந்து அக்குறையை நிவர்த்தி செய்துவிட்டன.அவர்களோடு போட்டிபோட நாளுக்குநாள் திறமையான புதுமுகங்களும் அறிமுகமாக தொடங்கியுள்ளத்தால் முன்னணி நாயகர்கள் கூட வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தேடி நடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.



இது தமிழ் சினிமாவின் நல்ல மாற்றத்தின் தொடக்கம்.இந்த வருட சிறந்த நடிகர்களாக திரையில் வாழ்ந்தவர்களில் மனதில் நின்றவர்களில் சிலரை பத்தி இப்ப பார்க்கலாம்.முதலில் தனுஷ் இவருக்கு இந்த வருடம் அவரது திரைப்பட வாழக்கையில் முக்கியமான வருடம் மொத்தம் ஐந்து படங்கள் வெளிவந்தன அனைத்தும் அவரின் முத்திரை பதித்த படங்களாக வந்தன.முதல் படமான ஆடுகளமே அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்று தனி இடம் பெற செய்தது.அடுத்து சேரன் இயக்குனராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த திரை பிரபலம் சென்ட்மென்ட் கதைகளை தாண்டி நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் மிஷ்கினின் யுத்தம் செய்,அவரது உதவியாளர் ராஜேஷ் மாதவ் இயக்கிய முரண் என்ற இரண்டு வித்தியாசமான படங்களில் கதை நாயகனாக தோன்றி மக்கள் மனதில் அழுத்தமான இடம் பிடித்த ஆண்டு இது.


அடுத்து விமல் பசங்க மூலம் அறிமுகமாகி இந்த வருடம் தூங்கா நகரம்,எத்தன்,வாகை சூட வா என்ற மூன்று படங்களின் இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் பட்டியலில் தன் இடத்தை தக்க வைத்து கொண்டார்.இந்த வருடம் பல திரைப்பட வாரிசுகள் மட்டுமல்லா மால் பல்வேறு புதிய நாயகர்கள் தமிழ் சினமாவில் அறிமுகமானாலும் நாய்கர்களுக்கான இலக்கணத்தை உடைத்து கதை தான் ரியல் ஹீரோ என உணர்த்திய அப்புக்குட்டி அழகர் சாமியின் குதிரை படம் மூலம் திறமைகளை மட்டுமே நம்பி இருக்கும் பல புதிய நடிகர்களுக்கான வாசலை திறந்துவிட்டார்.


அடுத்து தென்னிந்திய சினிமாவின் ஆல் டைம் பேவரைட்டான சூர்யா ஏழாம் அறிவில் இரண்டு விதமான தோற்றங்களில் தோன்றி கலக்கினார். அடுத்து பாலாவின் அவன் இவன் மூலம் உலகிலேயே முதல்முறையாக மாறு கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஏற்கனவே வித்தியாசமான் கதாபாத்திரங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ள விக்ரமிற்கு தெய்வ திருமகள் படம் மேலும் ஒரு மணிமகுடம்.ஹீரோ என்றால் நேர்மறையான கதாபாத்திரங்கள் தான் அவர் நல்லது செய்ய வேண்டும் அநீதியை கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற லாஜிக்கை உடைத்தெறிந்து வயதுக்கு ஏற்ற தோற்றத்தில் நடித்து மங்கர்த்தா படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார். எந்த நடிகர் வந்தாலும் ரசிகர் மன்றம் தொடங்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கோட்டை கட்டிய ஒரு சில நடிகர்களில் இவர்கள் இந்த வருடத்தின் முக்கியமானவர்கள்.


நடிகர்கள்:-2

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் பெர்பாமன்ஸ் மட்டும்மல்லாமல் வியாபார ரீதியாகவும் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறியிருக்கும் ஒரு சிலரை பற்றி இங்கே விரிவாய் பார்க்கலாம்.ஹீரோவிர்க்கான எந்த வித முக லட்சணங்களும் இல்லாதவர் என தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்ட இவர்.தற்பொழுது முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளார். இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஐந்து படங்களில் மூன்று பெரியளவில் பேசப்படவில்லை என்றாலும் ஆடுகளம் மயக்கம் என்ன என்ற இரு வெவேறு பரிமாணங்கள் நடிகர் தனுஷை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடமும் இந்திய அளவில் மிக பெரிய பெயரும் புகழும் பெற செய்திருக்கிறது.அடுத்து எந்த வித குடும்ப பின்னணியும் இல்லாமல் முறையான பயிற்சியோடு பல வருட போரட்டத்திற்கு பிறகு பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இந்த வருடம் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் நல்ல நடிகர் இயக்குனருக்கான நடிகர் என்கிற பெயரை வாங்கி தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் நடிகர் விமல்.அடுத்து விக்ரம், இயக்குனர் பாலா மூலம் மறுபிறவி கிடைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறிப்போன விக்ரம் தன்னை மீண்டும் நிருபித்திருக்கும் வருடம் 2011. பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தெய்வ திருமகள் படம் மூலம் உடல் மொழியால் அதிகமாய் பேசி இந்த வருடத்தின் தேசிய விருது பட்டியலில் இவரும் இருப்பார் என ரசிகர்களை பேச வைத்து இருக்கிறார்.


கமெர்சியல் தான் தன் அடையாளம் என்பதை மாற்றி பரிச்சார்த்த முயற்சிகளுக்கு நான் தயார் என்று உடல் வருத்தி உலக நடிகர்கள் வரலாற்றில் முதல் முறையாக மாறுகண் உள்ள நபராகவும் பெண் தன்மை உள்ள ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்து.இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தன அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.அடுத்து அஜித் மாஸ் ஹீரோ பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இவருக்கு ரசிகர்கள் அதிகம் இந்த வருடம் வெளிவந்திருக்கும் மங்காத்தா திரைப்படத்தில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்து நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார்.


இந்த நடிகர்களின் புதிய அவதாரங்களை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல சக திரைப்பட நடிகர்களும் அசந்து போய் அடுத்த வருடத்தில் இவர்கள் நடிப்பில் வெளிவரயிருக்கும் படங்களை மிக ஆர்வமாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது நிதர்சனம்.

நடிகைகள்:-

தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்திருப்பது கதாநாயகர்கள்தான். நடிகைகளை பொறுத்தவரையில் குறுகிய காலம் தான் அதிலும் அவர்கள் நடிப்பதற்க்கான வாய்ப்புள்ள படங்கள் அமைவது என்பது மிக அரிதான நிகழ்வாக கடந்த சில காலங்களில் இருந்தது.டைட்டிலில் பெயர் போட்டதற்காக இரண்டு காதல் காட்சிகள் நான்கு டூயட் பாடல்கள் என்று மட்டுமே நடிகைகளை பயன்படுத்தி வந்த தமிழ் சினிமாவில் தற்பொழுது மீண்டும் நடிகைகளை மைய்யப்படுத்திய கதைகளையும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களும் வர தொடங்கியுள்ளன.

அந்த வரிசையில் இந்த் 2011ஆம் வருடத்தில் மிக அதிகமான புதுமுக கதாநாயகிகள் அறிமுகமும் கடந்த வருடம் புதுமுகங்களாக இருந்த கதாநாயகிகளின் அடுத்தடுத்த படங்களும் திரைக்கு வந்தன.அவற்றில் திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் திரும்ப திரும்ப நினைத்து பார்க்கும் அளவுக்கு நடிப்பால் கதாபாத்திரத்தால் பேசப்பட்ட சில நடிகைகளை நினைவுபடுத்தலாம்னு நெனைக்கிறோம்.முதலில் கல்கி தமிழ் சினமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் என்ற பெயரை மட்டுமல்லாது நல்ல நடிகை என்கிற பெயரையும் தக்கவைத்து அவரது வாழ்வியல் சூழலை ஒட்டி நடக்கும் கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்து தான் சார்ந்துள்ள திருநங்கை சமுதாயத்தின் அடையாளமாக மாறினார்.

அடுத்து நடிகை அனுஷ்கா கவர்ச்சியான ரோல்களில் மட்டுமே தமிழில் தலை காட்டி வந்த இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் வெற்றிகரமாக ஓடிய அருந்ததி படத்தின் மூலம் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்று, ஏற்றுகொண்ட முக்கியமான நேரடி தமிழ் திரைப்படம் தெய்வதிருமகள். இதில் ஒரு கனமான கதாபாத்திரத்தை மிக அழகாகவும் இயல்பாகவும் செய்து அனைவரையும் கவர்ந்தார். அடுத்து அஞ்சலி அறிமுகமான கற்றது தமிழ் என்ற முதல் திரைப்படத்திலிருந்தே சிறிய வயதிலேயே ஆழமான பாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியிருந்த அஞ்சலி இந்த ஆண்டு நடித்த அனைத்து படங்களுமே அவரை பற்றி அதிகமாக பேசவைத்த படங்கள். அதில் குறிப்பாக அவரது வயதுக்கு முதிர்ந்த தோற்றத்தில் நடித்திருந்த கருங்காலி மற்றும் மிக இயல்பான காதலியின் பிரதிபலிப்பை காட்டியிருந்த எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் நல்ல நடிகை என எல்லாராலும் பாராட்டப்பட்டு அவரது நடிப்பிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அடுத்து இனியா இந்த வருடம் அறிமுகம். தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோயின்களின் தாய்மாநிலமான கேரளத்து வரவானாலும் தமிழக முகசாயலில் எல்லோராலும் கவரப்பட்ட நடிகையாக கிராமத்து நடிப்பில் முத்திரை பதித்த வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளார்.



இந்த வருடம் முழுக்க ஆடி பாடி ஓய்ந்த அத்தனை நடிகைகளையும் தன் நடிப்பாலும் வசீகரமான முகத்தாலும் வருட கடைசியில் வெளிவந்த ஒஸ்தி, மயக்கம் என்ன என்ற இரண்டு படங்களின் மூலம் கிராமம் நகரம் என இரு வேறு கதாபாத்திரங்களில் அசத்தி 2012 ஆம் வருடத்தின் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகியாய் இடம் பெறப்போவது நிச்சயம் என்பதை உணர்த்தியிருக்கிறார் ரிச்சா கங்கபாத்தியாய் . இந்த முறை தமிழ் சினிமா கனவுக்கன்னிகளை மட்டுமல்ல தரமான நடிகைகளையும் தந்திருப்பது இந்த வருடத்தின் சிறப்பு.


நகைச்சுவை நடிகர்கள் :-

திரைப்படங்கள் தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவை என்கிற விஷயம் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனது அதிலும் கதையோடு இணைந்த கருத்துக்கு முக்கியத்துவம் நகைச்சுவைக்கு மக்களிடம் என்றுமே குறையாத வரவேற்பு உண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் இருவர் முன்னணியில் இருப்பார்கள்.அன்றைய கலைவானர் என்.எஸ்.கே.மதுரம் தம்பதியினரில் தொடங்கி நேற்றைய வடிவேலு விவேக் வரைக்கான ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட வருடங்களுக்கு எல்லா திரைப்படங்களிலும் ஆட்சி செய்வார்கள்.



அந்த வரிசையில் அடுத்தகட்டம் இது இந்த வருடம் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக்கின் படங்கள் அதிகமாக வெளிவரவில்லை வந்த ஒரு சில படங்களும் ஒரே மாதிரியானதாகவும், நாடகத்தனமானதாகவும் இருந்ததால் மக்களிடம் பெரிதும் எடுபடவில்லை.அவர்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை இந்த வருடம் மற்ற நகைச்சுவை நடிகர்கள் கைப்பற்றி அவர்களுக்குரியாதாக மாற்றியிருக்கிறார்கள்.அந்த வரிசையில் முதலில் அதிகமான தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எல்லா வீட்டினருக்கும் செல்லபிள்ளையாக மாறிப்போன சந்தானம்.தொடக்கத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக பேசும் நடிகராக பார்க்கப்பட்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருப்பதற்கு காரணம் இவரின் இயல்பான நடிப்பும் எளிமையான அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசனங்களும் மிக முக்கிய காரணம் குறிப்பாக சிறுத்தை,வானம் தெய்வதிருமகள் ஆகிய படங்களில் இவர் செய்த பங்களிப்பு இவரை நகைச்சுவை நடிகராக மட்டும் ஒதுக்கி விடாமல் படம் முழுவதும் வரும் செகன்ட் ஹீரோ அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.


அடுத்து வெண்ணிலா கபடி குழு ஐம்பது பரோட்டா சூரி என்று சொல்லும் அளவிற்கு ஒரே படத்தில் நகைச்சுவையின் உச்சம் தொட்ட இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை,போராளி போன்ற திரைப்படங்கள் இவருக்கான தனி அந்தஸ்தை 2011 -ல் பெற்று தந்துள்ளது. ஏற்கனவே நகைச்சுவையில் தனி பாணியில் கலக்கி கொண்டிருந்த கஞ்சா கருப்புக்கு இந்த ஆண்டு நகைச்சுவை நடிப்பில் ஒரு ஏற்றத்தை ஏற்படுத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.மொத்தத்தில் நகைச்சுவை என்கிற தனி டிராக்களாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் ஆரோக்கியமான நகைச்சுவை மாற்றத்தை தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்திருக்கிறது இந்த 2011 ஆண்டு.


பாடலாசிரியர்கள்:-

கவிதைகள் இலக்கியமாக ஒதுங்கியிருந்த இரண்டு நூற்றாண்டுக்கு முன் இருந்த காலம் மாறி கடந்த நூற்றாண்டில் மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று புதிதாய் பரிணமித்திருக்கிற எல்லா கவிஞர்கள் வரை அவை பாடல்களாக, இசை கோர்வைகளாக, குறுவட்டுகளாக இணையத்தில் என பல்வேறு பரிமாணங்களில் உலவி கொண்டிருந்தாலும் அவை திரைப்பட பாடல் என்ற பலகைக்குள் வரும் பொழுது அவை தனி அடையாளமாகி பட்டொளி வீச தொடங்கி விடுகிறது.அதிலும் தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் படங்கள் வருவது இல்லை என்கிற அளவுக்கு தனிச்சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடல்களில் புரியாத வார்த்தைகள் ஒரு பக்கம் தெறித்து கொண்டிருந்தாலும் அர்த்தமுள்ள வித்தியாசமான பாடல் வரிகளால் மக்கள் மனதில் சந்தோஷ முடிச்சு போட்டிருக்கிறது 2011 -ஆண்டின் தமிழ் சினிமா பாடலாசிரியர்களை பற்றிய ஒரு கண்ணோட்டம் இது.


முதலில் கவிஞர் தாமரை பாடல் எழுத தொடங்கிய முதல் படம் முதல் வேற்று மொழி கலக்காமல் ஆபாசமான வரிகள் இல்லாமல் தான் பாடல் எழுதுவேன் என்கிற உறுதி குறையாமல் பாடல்களை எழுதி வரும் இவர் இந்த வருடம் எங்கேயும் காதல் திரைப்படத்தின் எங்கேயும் காதல் பாடல் தொடங்கி எழுதிய சில பாடல்களையும் வருடம் முழுக்க உச்சரிக்கும் பாடல்களாக மாற்றியுள்ளார்.அடுத்து வாலிபம் குறையாத வாலி மூண்றாம் தலைமுறையினரும் கொண்டாடும் இவரது பாடல்களில் இந்த வருடம் புதுப் புனல், கலசலா ,மச்சி ஓபன் தி பாட்டில் ,நங்கை போன்ற இளைஞர் களின் வாயில் எப்போதும் முனுமுனுக்க செய்யும் படல்களை தந்திருக்கிறார்.


அடுத்து நா.முத்துகுமார்.இவரது திரைப்படப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெரும் நபர்கள் அதிகரித்து வந்தாலும் இவர் அலட்டிக்கொள்ளாமல் கடந்த வருடங்களின் தொடர்ச்சியாக இந்த வருடத்திலும் அதிக பாடல்களை மட்டுமல்லாமல் அழகான ஹிட் பாடல்களையும் தந்து தவிர்க்க முடியாத பாடலாசிரியராக மீண்டும் இடம்பிடித்தார். அடுத்து வைரமுத்து இந்த வருடம் தன் மகனோடு களம் இறங்கியுள்ளார். இருவரும் போட்டி போட்டு கொண்டு ஹிட் படல்களை கொடுத்த வருடம் குறிப்பாக வாகை சூடவா வில் சரசர சார காற்று தொடங்கி பல தனி அடையாள பாடல்களை தந்திருக்கிறார்.


அதேபோல் அவரது மகன் மதன் கார்க்கியும் நுட்பமான வரிகளால் அறிவியல் ரீதியான பல்வேறு வார்த்தைகளை தமிழ் பாடலகளில் உலவவிட்டு பாடல்களை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார் குறிப்பாக ஏழாம் அறிவு படத்தில் இவர் எழுதிய சீன பாடலை சொல்லலாம்,கோ திரைப்படத்தில் இவரின் என்னமோ ஏதோ இந்த வருடத்தில் அதிகமாக இணையத்தில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் இவரை மூத்த இளம் இசையமைப்பாளர்கள் வரை அனைவராலும் தேடபடுப்பவர்களில் ஒருவராகவும் மாற்றியிருக்கிறது.



அடுத்து இந்த வருடம் புதிய பாடலாசிரியராக அவதாரமெடுத்திருக்கும் நடிகர் தனுஷ் இளைஞர்களின் நாடித்துடிப்பை இவர் சரியாக புரிந்து கொண்டு இவர் சாதரணமான வார்த்தைகளால் பேச்சு வழக்கை பாடல்களாக மாற்றி எழுதிய பாடல்கள் இந்த வருடத்தின் மோஸ்ட் வாண்டட் சாங்க்ஸ் என்றால் அது மிகையாகாது.இந்த வருடம் படங்களில் கதைக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே வேளையில் அவசியமான இடங்களில் பாடல்களை இடம்பெற செய்து நல்ல பாடல்களுக்கான முக்கியத்துவத்தையும் நல்ல பாடலாசிரியர்களுக்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது தமிழ்சினிமாவின் 2011 ஸ்பெஷல்.


இசையமைப்பாளர்கள்:-1

இசையும் இயலும் நாடகமும் ஒருங்கிணைந்து ஒளிப்படமாகிய வரலாறு தான் சினிமா.காட்சிகளில் வசனங்கள் பூர்த்தி செய்யாத பல இடங்களை இசையால் முழுமை பெற செய்யும் வலிமை இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே உண்டு. உலக சினிமாவில் பின்னணி இசை மட்டுமே ஆட்சி செய்கிறது இந்திய சினிமாவில் பின்னணியும் பாடல்களும் தான் படத்தின் ஊக்கமாக இருக்கின்றன. படம் வெளிவருவதற்கு முன்னேரே இசை வெளியிட்டிற்கு பெரிய வரவேற்ப்பை கொடுப்பது இந்திய சினிமாவில் தமிழ் சினிமா முக்கிய இடம் வகிக்கிறது.


எம்.எஸ்.வி. இளையராஜா ஆண்ட தமிழ் சினிமா இசையை இந்த வருடம் பத்துக்கும் மேற்பட்ட புது இசையைமைப்பளர்கள் பழைய இசையமைப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டு 2011 ஆம் ஆண்டை ஒரு மியுசிக்கல் ஆண்டாக மாற்றியுள்ளனர்.இந்த வருடத்தின் புதிய வரவுகளான எங்கேயும் எப்போதும் -சத்யா,யுத்தம் செய் -கே.,வாகை சூடவா ஜிப்ரான்,கண்டேன் -விஜய் எபினேசர்,முரண்- சாஜன் மாதவ், ரவுத்திரம்- பிரகாஷ் நிக்கி,ஆகியோர்களால் இசை இன்னும் இளமையானதொடு மட்டுமல்லாமல் அந்த படங்களுக்கு பாடல்களால் தனி பெயரையும் வாங்கி தந்தது. அடுத்து இளையாராஜா இலக்கிய படைப்புகளான பொன்னர் சங்கர்,மற்றும் அழகர் சாமியின் குதிரை படங்களுக்கு த்ன் இசையால் உயிரும் மதிப்பும் குடுத்து தனி இடத்தில் நிற்கிறார்.


அடுத்து அவரது மகன் யுவன் சங்கர் ராஜா அப்பாவின் பெயரை இந்த வருடமும் அவர மெய்பிக்கும் வகையில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் மூலம் இந்த வருட இசை பயணத்தின் உற்சாக பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே மாதிரியான மெட்டுகளையே இவர் எல்லா படங்களிலும் தருகிறார் என்கிற விமர்சனமிருந்தாலும் ரசிக்கும் படியான பால்களை தருவது இவரின் தனிச்சிறப்பு.அடுத்து ஜி.வி.பிரகாஷ் எ.ஆர்.ரகுமானின் மருமகன் என்கிற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் அவரின் புகழுக்கு மேலும் புகழ சேர்க்கும் வகையில் இவர் இந்த் வருடத்தில் இசைஅமைத்த ஒவ்வொரு பாடல்களும் மெகா ஹிட்.


அடுத்து வித்யாசாகர் பெயரளவில் சில படங்களை இவர் இந்த வருடத்தில் செய்திருந்தாலும் அந்த படத்தின் பாடல்கள் கால ஓட்டத்தில் கரைந்து சென்று விட்டன என்றே சொல்லவேண்டும். அடுத்து காதலுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். ரகுமானிடம் வேலை செய்துவிட்டு திரும்பி இந்த் வருடம் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் பேசப்பட்டவனாக இருந்தன.அடுத்து பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகி இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்க தக்க பாடல்களை கொடுத்து மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் தமன் . இன்று கடைசியாக விஜய் ஆண்டனி ஒரு பக்கம் நடிப்பை தொடர்ந்து இசையையும் கைவிடாமல் இவர் இந்த் வருடம் இசையமைத்த படங்கள் அனைத்தும் லோக்கல் குத்து மொத்தத்தில் இந்த வருட இசை ஜொலித்தது.


இசையமைப்பாளர்கள்:-2


இந்த வருடம் இசை மழை பொழிந்தாலும் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்த பாடல்களை தந்த இசையமைப்பளர்களை பற்றி கொஞ்சம் விரிவா பார்க்கலாமா? முதலில ஜிப்ரான் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வாகை சூட வா படத்தின் மூலம் தன் முதல் பட இசை வாய்ப்பை பெற்ற இவர் தன் பொறுப்பை உணர்ந்து சமகால வரலாற்று இசையை மிக அருமையாக தந்திருக்கிறார். அத்துணை பாடல்களும் ரசிக்கும் படியாக இருந்தது சிறப்பு,அடுத்து கண்டேன் படத்தின் அறிமுக இசையமைப்பாளர் விஜய் எபினேசர் படத்தின் காதல் பாடல்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் வெவ்வேறு விதமாக தந்து தனி இடம் பிடித்தார்.


அடுத்து எங்கேயும் எப்போதும் பட இசையமைப்பாளர் சத்யா முதல் படம் என்பதை எந்த இடத்திலும் உணராத வகையில் பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் நம்மை படத்தோடு ஒன்ற வைத்து அந்த படம் மாபெரும் வெற்றியைடைய உறுதுணையாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று இருக்கும் மிக சிறிய வயது இசையமைப்பாளர்களில் குறிப்பிடும் படியான ஒருவர் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாடல் மற்றும் பின்னணி இசை அனுபவத்தின் மூலம் அந்த படத்தை தூக்கி பிடித்து செல்பவர் மற்றும் அந்த படத்தின் இன்னொரு ஹிரோ என்றே சொல்லவேண்டும்.இந்த வருடம் தெய்வ திருமகள் படத்தில் அவரது பாடல்களும் தீம் மியூசிக்கும் பெரும்பாலான தமிழ் ரசிகர்களில் ரிங்டோனாக இன்றளவும் நிலைத்திருப்பது அவர் இசையின் சிறப்பின் ஒரு சிறிய உதாரணம்.மேலும் ஆடுகளம்,மயக்கம் என்ன என அவர இசையமைத்த அத்துணை படங்களும் மாபெரும் மியுசிக்கல் ஹிட். அதற்கு வருடத்தில் அவரை பெரிய இயக்குனர்களோடு பணி செய்ய செய்துள்ளது.


அடுத்து யுவன் சங்கர் ராஜா இந்த வருடம் ஒன்றிரண்டு படங்கள் செய்திருந்தாலும் பேசப்பட்ட படம் என்றால் அது மங்காத்தா படத்தின் பாடல்கள் மட்டுமே.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இவரின் இசை ஆல்பங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது புரியாத வரிகளாக இருந்தாலும் திரும்ப திரும்ப பாட வைக்கும் இவரின் இசை அனுபவம் இந்த் வருடத்திலும் தமிழ் சினிமா ரசிகர்களை ஆட்டிப்படைத்தது.என்றே சொல்ல வேண்டும் இந்த வருடம் தமிழ் சினிமாவில் இசை இன்றியமையாத ஒரு இடத்தை பிடித்து அடுத்த வருடத்தில் இன்னும் பல உயரத்தை தொட ஆயத்தமாக உள்ளது.


திரைப்படங்கள் 2011:-1


உலக அளவில் ஆண்டு தோறும் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படும் தமிழ்சினிமாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரைப்படங்கள் வராத போதும் எதிர்பாராத படைபாக்கங்களால் தமிழ் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று .உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களின் மனதில் அதிகமாய் இடம் பிடித்த இந்த ஆண்டின் பத்து திரைப்படங்கள் பற்றி ஒரு அலசு அலசுவோமா....


முதலில் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து ஆறு தேசிய விருதுகளையும் அள்ளி சென்ற ஆடுகளம்.அடுத்து வழக்கமாக மென்மையான குடும்ப படங்களை தந்து வந்த இயக்குனர் ராதாமோகன் இந்த ஆண்டு பயணம் திரைப்படத்தின் மூலம் தனது விறுவிறுப்பான திரைப்பயனத்தை தொடங்கியிருக்கிறார் விமான கடத்தல் தான் படத்தின் கரு என்றாலும் தற்கால அரசியல் மற்றும் சமுக சூழலை மனதில் கொண்டு தனக்கே உரிய பாணியில் உணர்வுரீதியான ஒரு படைப்பை தந்திருக்கிறார். அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ஐந்து கதைகள் ஒரே இடத்தில் இணையும் திரைக்கதை பாணியில் இரண்டாண்டுக்கு முன் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதம் படம் அதே இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் தமிழில் வானம்.



அடுத்து படம் வெளிவருவதற்கு முன்னரே உலக பட விழாக்களில் பங்கேற்று பரிசு பெற்ற திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்து திரையில் சில நாட்களும் விமர்சகர்கள் மத்தியில் தற்போது வரையிலும் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக பேசப்பட்டு வரும் இந்த படம் ஹிந்தியின் பிரபல நடிகர் ஜாக்கி சாரபின் முதல் தமிழ் படம் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லமால் முதல் படத்திலேயே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகராஜன் குமாரரஜாவின் ஆரண்யகாண்டம். இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்க்கும் இருக்க வேண்டிய உறவை சமீபகாலமாக அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கும் இயக்குனர்களின் வரிசையில் ஒரு அழகான கிராமியம் சார்ந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையை அதன் வீரியம் குறையாமல் எந்த வித வியாபார சமரசங்களும் இல்லாமல் சிறந்த படைப்பாக அமைத்திருந்த சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை.


அடுத்து நர்த்தகி தமிழ் சினமாவில் அரிதாக பரிமளிக்கும் பெண் இயக்குனர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துகொண்ட இயக்குனர் விஜய பத்மா இந்த படத்தின் மூலம் எவரும் கையாள தயங்கும் ஒரு திருநங்கையின் கதையை முழுமையாக ஒரு திருநங்கையை வைத்தே தந்திருக்கிறார்.அடுத்து ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக பேசபட்டாலும் அது படமாக்கப்பட்ட அழகியலால் எல்லோரையும் கவர்ந்த விக்ரமின் தெய்வ திருமகள்,புதிய இயக்குனரானாலும் சரியான முறையில் கதை சொன்னால் குத்துப்பட்டு நாலு பைட்டு இல்லாமல் வெள்ளிவிழா கொண்டாட முடியும் என்று நிருபித்த முதல் முறையாக பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் பட நிறுவனம் தமிழில் தயாரித்து வெளியிட்ட எங்கேயும் எப்போதும்.


அடுத்து களவாணி மூலம் கடந்த வருடம் தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சற்குணம் குழந்தை தொழிலாளர் பிரச்ச்னையை அடிப்படையாய் வைத்து இரண்டாவது படத்திலேயே 1960 களை நம் கண் முன் நிறுத்திய சமகால வரலாற்று படமாய் வடித்திருந்த வாகை சூட வா. செல்வராகவனின் வழக்கமான கூட்டணியோடு வித்தியாசமான கதை சூழலில் வெளிவந்து மனதை மயக்கிய மயக்கம் என்ன இது தான் இந்த 2011 ஆம் வருடத்தின் வணிகரீதியில் அல்லாமல் படைபாக்கத்தால் பேசப்பட்ட தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பத்து திரைப்படங்கள். ..


திரைப்படங்கள் 2011:-2




இந்த வருசத்தில் வெளிவந்து மறக்கமுடியாததா மாறின ஐந்து படங்கள் பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம் .முதல்ல வர்றது ஆடுகளம் வெற்றிமாறன் துனுஷ் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையின் பின்னணியில் நம் மண்ணின் மனிதர்களிடம் புதைந்திருக்கும் பல்வேறு குணாதிசியங்களை இயல்பாய் பதிவு செய்து நம் கண் முன் உலவவிட்டுருக்கிறார் வெற்றிமாறன்.எல்லா கதாபாத்திரங்களும் மிகைப்படுத்துதலும் இல்லாமல் நேர்த்தியாய் செய்திருந்த்ததால் ஆறு தேசிய விருதுகளை அள்ளி தமிழ் சினிமா வரலாற்றில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படமாக அமைந்தது.


அடுத்து பொதுவா ஒரு நாவலையோ சிறுகதையையோ திரைபடமாக்குறதுங்கிறது இயக்குனருக்கு சவாலான வேலை.அந்த கதையின் இயல்பும் கெடாமல் அதேசமயம் திரை மொழியும் கச்சிதமாக படைக்கப்படுவது அரிதான ஒரு நிகழ்வு. அதை சாத்தியமாகி இலக்கியத்திற்க்கும் சினிமாவிற்குமான உறவுப்பாலத்தை அகலப்படுத்திய ஒரு படமாக அமைந்தது அழகர்சாமியின் குதிரை.அடுத்து தெய்வ திருமகள் ஐயம் சாம் என்கிற ஆங்கில திரைப்படத்தோட அப்பட்டமான காப்பின்னு சொல்லபட்டாலும் விக்ரமின் நேர்த்தியான நடிப்பாலும் நிரவ்ஷாவின் அழகான ஒளிப்பதிவாலும் கிறங்க வைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை மழையாலும் ஏ.எல்.விஜய்-ன்.சுவாரசியமான திரையாக்கத்தாலும் கவித்துவமான பதிவா வெளிவந்து வெற்றியும் பெற்றது இந்த படம்.


கதைய மட்டுமே நம்பி அத திறமையா சொல்ல முடிஞ்சா முன்னணி நடிகர்கள் யாரும் இல்லைனாலும் அசகாய வெற்றி பெறமுடியும்ங்கிற நம்பிக்கையோட புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் அழகான காதலோடும் ஆழமான கருத்தோடும் ஒரு விழிப்புணர்வு படமா வெளிவந்த எங்கேயும் எப்போதும் படம் இயக்குனர் சரவனனனுக்கு முதல் படம்னு சொன்னா யாராலையும் நம்பவே முடியாது.கடைசியா வருட கடைசியில் வெளிவந்தாலும் முன்னணியில் இருக்கிற மயக்கம் என்ன செல்வரகவனுக்கே உரிய பாணியில் தேசிய விருது பெற்ற தனுஷ் நடிப்புல வெளிவந்த படம் புதுப்பேட்டைக்கு அப்புறம் அண்ணன் தம்பி ரெண்டு பேர் கூட்டணியில வெளிவந்த இந்த படம் இயல்பான கதையாலும் தன்னை ஏமாற்றியவர்களை பழி வாங்க சிறந்த வழி ன்னு வாழ்ந்து காட்டுவது என்கிற மிக அருமையான கருத்தோடும் பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தனுஷ் செல்வராகவனின் புதுமையான பாடல் வரிகளாலும் இளைஞர்கள் மனதில் தனி இடம்பிடித்து வெற்றிகரமா ஓடிகொண்டிருக்கும் இந்தபடம் ஒரு நம்பிக்கை டானிக்.எத்தனையோ படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்தாலும் தமிழ் சினிமாவின் 2011 அடையாளாமாக இருக்கும் இந்த படங்கள் தான் உலக சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் 2012 ஆம் ஆண்டில் வெளிவர இருக்கும் திரைப்படங்களின் மீதான ஆர்வத்த அதிகரிக்க செய்திருக்குனு சொன்னா அது மிகையாகாது.



இயக்குனர்கள்:-1

நாயகர்களின் கைகளில் இருந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் கைகளில் மீண்டும் முழுவதும் மீண்டு வந்திருக்கிறது. இந்த 2011ம் ஆண்டில். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இயக்குநர் வெற்றி மாறன் 2 தேசிய விருதுகளோடு தமிழ் இயக்குநர்களின் பெயரையும், புகழையும் உயர்த்திக் காட்டினார். புதுமுக இயக்குநர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வருடம் பல படங்கள் வெளி வந்து வெற்றிகரமாக ஓடாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தன. அதில் குறிப்பிடப்படவேண்டியவர் சமூகத்திற்கு தேவையான ஆழமான கருத்தை அழகியலோடு இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்கேயும் எப்போதும் திரைப்படமாகத் தந்த இயக்குனர் சரவணன்.


அடுத்து கடந்த வருடம் அதிகம் பேசப்பட்ட களவாணி படத்தின் எந்த சாயலும் இல்லாமல் இரண்டாவது படத்திலேயே ஒரு சமகால வரலாற்றை நல்ல கருத்தோடு கிராமத்துப் பின்னணியில் வாகை சூட வா திரைப்படமாகப் படைத்த இயக்குனர் சற்குணத்திற்கு முக்கிய இடமுண்டு. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமளவிற்கு படைப்புகளைத் தருகின்ற இயக்குநர் பாலா அவன் - இவன் படத்தின் மூலம் வித்தியாசமான கதாபாத்திரங்களை திரையில் உலவ விடுவதில் முத்திரை பதித்தார். அடுத்து தனி மனித கோபத்தை தனக்கே உரிய பாணியில் சுவாரசியமான படைப்பாக யுத்தம் செய் மூலம் தந்திருந்தார் மிஷ்கின்.

அடுத்து தன் முந்தைய படங்களின் அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அவருடைய அதே கூட்டணியோடு வெற்றிகர பயணத்தை முடித்திருக்கிறார் ராதா மோகன். அடுத்து அயல் சினிமாவின் தழுவல் என்றாலும் தனக்கே உரிய திரைக்கதை யுக்திகளாலும், மனதை மயக்கும் காட்சியமைப்புகளாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தெய்வத்திருமகள் தந்த விஜய். இறுதியாக இரண்டு வருடத்திற்குப் பிறகு தன் வழக்கமான குழுவோடு ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணத்தை யதார்த்தத்தின் சாயல் குறையாமல் மயக்கம் என்ன திரைப்படமாக தந்திருக்கிறார் செல்வராகவன். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவை இவர்கள் இயக்கியதில் எந்தக்குறையும் இல்லை.

இயக்குனர்கள்:-2

எத்தனையோ படங்கள் வருகிறது. எவ்வளவோ இயக்குநர்களும் வருகிறார்கள். ஆனால் ஒரு சில படங்களில் வரும் சில காட்சியை வைத்தே யாரடா இந்த இயக்குநர் என்கிற எதிர்ப்பார்ப்பை நம்மிடம் ஏற்படுத்துபவர்கள் குறைவு தான். பலர் அந்த திரைப்படங்கள் திரையரங்கை விட்டு போகும் போதே மக்கள் மனதை விட்டும் போய் விடுகின்றார்கள். இதெல்லாம் தாண்டி ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த வருட தமிழ் சினிமாவின் அடையாளமாக நாங்கள் குறிப்பிட விரும்பும் மூம்மூர்த்திகளில் முதலாமானவர் இயக்குநர் சரவணன். இவர் இயக்கி வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவரின் முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவிற்கு மாற்றி இருக்கிறது. சினிமா மொழி தெரிந்த நல்ல இயக்குநராக இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்திருக்கிறார். ஒரு அருமையான விழிப்புணர்வுப் படத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் பொழுதுபோக்கான வெற்றிபடமாக மாற்றியதில் இவரை தமிழ் சினிமாவின் இந்த வருட சாதனையாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

அடுத்து வெற்றி மாறன், வருடத்தொடக்கத்தில் வந்து 2 தேசிய விருதுகளை அள்ளியதோடு அல்லாமல் மண்ணின் பதிவுகளை திரையில் கொண்டு வரும் இயக்குநராக மாற்றி இருக்கிறது. இறுதியாக ஏ.எல்.விஜய் மதராசப்பட்டினம் படம் மூலம் மூத்த கொண்டாடப்பட்ட இவர் தெய்வத்திருமகள் மூலம் தன் இடத்தை மீண்டும் தக்க வைத்திருக்கிறார். மனதை விட்டு நீங்காத இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் இவர் இயக்கத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவை இந்திய சினிமாவைத் தாண்டி உலக சினிமாவோடு இணைக்கும் பயணத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.


இப்படிக்கு

மு.வெங்கட்ராமன்

திருநெல்வேலியிலிருந்து 2011

Wednesday, December 14, 2011

"தெரிந்தது கைமண்ணளவு"



ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் சொல்லிக்கிட்டிருக்கா.

அப்ப காப்பியோட அந்த ரூம்க்குள்ள வர்ற அவங்க அம்மா பாப்பா நீ காலேஜ் போன பிறகு எவ்வளோ போன் வருது போகுது.எனக்கு பேச தெரியுதா ?அணைக்க தெரியுதா செல்போனெல்லாம் நீ வச்சுக்கோ வீட்டில வச்சுட்டு போகதேனா கேட்க்கமாட்டிக்கிற, இத எப்படி யுஸ் பண்றது?.

கோபமான ஷாலி "அம்மா ரெண்டுநாளா உனக்கு நா சொல்லி கொடுத்தெல்லாம் வச்சு ஒரு புக்கே போடலாம். ஆனா உனக்கு புரியவே மாட்டிக்குது. இங்கவா அந்த போன் இப்படி குடு நொள்ளை அவ அம்மாக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா இந்த பச்ச பட்டன் அமுக்கினா கால் அட்டென்ட் பண்ணும்,செவப்பு பட்டன் கால் கட் பண்ண. நாலாம் நம்பர் அமுக்கினா அப்பாக்கு கால் போகும், இரண்டு அமுக்கினா எனக்கு கால் வரும்,ஒன்னு அமுக்கினா அண்ணாவுக்கு கால் போகும்.இவ்வளவு தான் சரியா! புரிஞ்சுதா எங்க சொல்லு பாப்போம்ங்கிறா"...

ஷாலி அம்மா திக்கி திணறி சொல்றாங்க "நாலு அமுக்கினா கால் வரும் இரண்டு அமுக்கினா கட் ஆகும். பச்ச பட்டன அமுக்கினா அப்புறம் ஐயோ மனசில நிக்கவே மாட்டிக்குதுமா"...அப்படிங்கிறாங்க

டென்சன் ஆகுற ஷாலி என்னமா இது கூட ஞாபகம் வைக்க முடியலையே உனக்கு, வயசாயிட்டாலே இப்படித்தான் உங்க ஜென்ரேசன் பீப்பிள் லாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே அவ அண்ணன்கிட்ட இருந்து கால் வருது அந்த கால அட்டென்ட் பண்ணி அம்மாகிட்ட குடுத்துட்டு இனி என்ன சொல்லிகுடுத்தாலும் உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாது உன் பையன் கிட்ட பேசு அப்படிங்கறா எரிச்சலா....


ஷாலி அம்மா போன கையில வாங்கி ஹலோ சொல்றாங்க எதிர் பக்கம் அவங்க பையன் அம்மா அந்த மளிகை சாமான் லிஸ்ட் தொலைச்சிட்டேன். என்னலாம் வாங்கனுமுனு ஒரு தடவை சொல்லுங்க நா எழுதிக்கிறேனு சொல்லவும், இந்த பக்கம் அவங்க அம்மா பரவாயில்லை தம்பி சொல்றேன் குறிச்சுக்கோனு ஆரம்பிக்கிறாங்க,"புளி கால் கிலோ, வத்தல் அரைகிலோ,மல்லி பொடி நூறு,அரிசி 25 கிலோ, தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்,நல்லெண்ணெய் -ஒரு லிட்டர்,உ.பருப்புஇரண்டு கிலோ,து.பருப்பு-இரண்டு கிலோ இப்படியே ஒரு 50பொருள் லிஸ்ட் படபடனு எதையும் பார்க்காமலே சொல்லிட்டு பார்த்து பத்திரமா வீட்டுக்கு வாடானு போன கட் பண்ணிட்டாங்க
ஷாலிக்கு அவங்க அம்மா போன்ல அவ அண்ணன் கிட்ட சொன்ன பொருள்ல பத்து பொருள் பேர் கூட ஞாபகம் வைக்க முடியில....



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து 
காலம் :-ஆகஸ்டு நாலாவது  வாரம் 2011

Wednesday, December 7, 2011

"போராடுவோம் போராடுவோம்"


        இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது. பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா சங்கங்களும் அறிவிச்சிட்டாங்க.

        நெறைய பஸ்ஸூம் ஓடாததனால காலேஜ்,ஸ்கூல் போற பசங்களுக்கும் பிரச்சனை காலையில 6 மணியில தொடங்கி சாயங்காலம் 6 மணிக்கு முடியற இந்த ஒருநாள் பந்த்தால அரசாங்கம் பணியுற மாதிரி தெரியில...அவங்க ஓவ்வொரு காலகட்டத்திலையும் விலையேற்றிக்கிட்டுதான் இருக்காங்க.

     இவங்களும் ஒருநாள் ஸ்ட்ரைக் பண்ணிட்டுதான் இருக்காங்க,விலைவாசியும்  குறைஞ்சபாடில்ல. இதனால பாதிக்கப்படுறது. நம்ம முத்துக்குமார் மாதிரி தினக்கூலி சம்பாதிக்கிறவங்கதான் ஒருநாள் பட்டினி இருக்கவேண்டியதாயிருது.



       இந்த ஸ்ட்ரைக்கால இன்னைக்கு கடை லீவுங்கிறதால முத்துகுமார் வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள வரும் போது அவன் பொண்டாட்டி ஆரம்பிச்சுட்டா " இன்னைக்கு இருந்த அரிசியை வச்சு கஞ்சி காய்ச்சிட்டேன். நாளைக்கு பட்டினிதான் உங்க முதலாளி கடைய முடுறாருனா அட்வான்சா ஒரு 100ரூபாய் கொடுத்திருக்கலாம்ல, நம்மள பத்தி யாரு நினைக்கிறாங்க....சரியா உன்ன கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இந்த பசி கொடுமைய நா அனுபவிக்கலாம் உன் பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சு.நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது வழி பண்ணாம இராத்திரி வீட்டுக்கு வந்திராதணு " கத்திட்டு உள்ள போயிட்டா..



         என்ன பண்றதுங்கிற யோசனையோட வீட்ட விட்டு வெளியில் வர்ற முத்துக்குமார் கண்ண மூடி மேல பார்த்து கொஞ்ச நேரம் அப்படியே நிக்கிறான். அப்ப தூரத்தில மைக்செட்ல

     "நாளை இசக்கியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஏழு மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்  பக்தர்கள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக"ஒரு குரல் அவன கடந்து போகுது... லேசா புன்னகையோட கண்ண திறக்கிறான் முத்துகுமார்.




இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011