Thursday, June 9, 2011

தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!



"சுலோச்சனா முதலியார் பாலம்" நெறைய பேருக்கு இப்படி சொன்னா தெரியாது, அதாங்க திருநெல்வேலி கொக்கிரகுளத்தில இருக்கிற தாமிரபரணி ஆற்றுப்பாலம் ...
      
   காலையில ஓர் ஏழு மணி இருக்கும்.

   'அங்க அவசரமா வண்டிய நிப்பாட்டி போன் அட்டென்ட் பண்றான் முத்து.
"டேய் நயினார் வடக்கு பைபாஸ் ரோடு ஆற்றங்கரைக்கு வந்திரு,
அங்க குளிச்சுக்கலாம்னு " சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டான் 

     அந்த இடத்தில கொஞ்சம் கூட்டம் கம்மி.அதுமட்டுமில்ல அங்க பக்கத்தில இருக்கிற கோபுரம் மட்டுமே மிஞ்சியிருக்கிற ஆசியாவிலேயே மிகப்பெரிய பிள்ளையார் மனிமூர்த்தீஷ்வர உச்சிஷ்ட கணபதி கோயிலும் ஒரு காரணம். வழக்கமா இங்க ஆறுல குளிச்சிட்டு அந்த கோவிலுக்கு போய் ஒரு கும்பிடு போட்டுட்டு போறது இவங்க இரண்டு பேர் பழக்கம்.




' முத்து-நயினார்' இரண்டு பசங்களும் கடப்பாரை நீச்சல் ஸ்பெஷலிஸ்ட்:"
நீச்சல்ல அவ்ளோ எக்ஸ்பெர்ட்டானு நெனச்சுராதிங்க. கடப்பாறைய தண்ணிக்குள்ள போட்டா என்ன ஆகும் ?..........
முழ்கிரும்... அதே தான் "நம்ம ஊருக்குள்ள சுனாமி வரதுக்குள்ள எப்புடியாவது நீச்சல் கத்துப்பேன்டானு" சபதம் போட்டு சுத்துற கூட்டத்தில இவனுங்களும் உண்டு...


      நயினாரும் வந்துட்டான் சாரத்த  கட்டிக்கிட்டு ரெண்டு பேரும் ஆற்றுக்குள்ள ஓரமா ஒரு பாறைய பிடிச்சு செட்டில் ஆகுறாங்க. முதல்ல முத்து கிழக்க பார்த்து தண்ணிக்குள்ள நல்லா முணு முங்கு முங்கி எந்திரிக்கிறான்.

          நயினாரும் ஆற்று தண்ணியில மூங்கிட்டே பேச்ச ஆரம்பிக்கிறான், "டேய் முத்து ஆனா நம்ம ஊர்ல யாருக்குமே பொறுப்பு இல்லடா...நம்ம தாமிரபரணி ஆற்றுல ஒரு இடம் விடாம மணல் அள்ளுறாங்க, எல்லா பாக்டரி சாக்கடையையும் ஆற்றுல கலக்குறாங்க..அரசாங்கமும் இதெல்லாம் கண்டுகிறதில்ல. ஏதோ கோடகம் கால்வாய் திட்டம்னு போட்டு சின்ன கால்வாய் எல்லாம் பாதுகாக்கிறாங்க. ஆனா இவ்வளவு பெரிய ஆறு ஜீவநதியா ஓடுற நம்ம தாமிரபரணிய கண்டுக்க மாட்டிக்கிறாங்க"...

         அப்ப முத்து சொல்றான் ."டேய் நயினார் நீ வேணா பாரு இன்னும் நாலஞ்சு வருஷம் தான் அப்புறம் தாமிரபரணியும், கூவம் நதி மாதிரி ஆயிரும்..... பிறகு நம்ம அரசியல்வாதிங்க சிங்கப்பூர்ல ஒரு ஆற்ற சீர்படுத்தின மாதிரி தாமிரபரணியையும் மீட்ப்போம்னு அறிக்கைவிட்டு ஒட்டு வாங்குவாங்க "

ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிச்சாங்க..... :-) .


           அப்ப நயினார் பாறை மேல வச்சுருக்கிற ரெண்டு ஷாம்பூ பாக்கெட்ல ஒன்ன எடுத்து வெட்டி நல்ல தலையில தேய்க்கிறான்.."என்னடா முத்து இதுல நுரையே வரல என்ன ஷாம்பூ இது... எவன் தயாரிக்கிறானோ சுத்தமா  நுரையே வரல ஏமாத்துறானுங்கடா விளம்பரம் மட்டும் பளபளக்குது சரி அந்த இன்னொரு ஷாம்பூவ வெட்டு"ன்னு அதையும் வாங்கி தலையில உடம்புல எல்லாபக்கமும் நல்ல தேய்க்கிறான் நல்ல நுரை வந்து நயினாரோட கருத்த உடம்பு வெள்ளையானத சந்தோசமா பார்த்துட்டே தண்ணிக்குள்ள ஒரு முங்கு மூங்கி எந்திரிக்கிறான் .....

             அப்ப நயினார சுற்றிலும் ஒரு நாலு அடி தூரத்துக்கு ப்ச்சை நிற தாமிரபரணி தண்ணி ஷாம்பூ நுரையால வெள்ளையா மாறி மறையுது ....

இப்படிக்கு...
திருநெல்வேலியிலுருந்து மு.வெங்கட்ராமன்
காலம்:-ஜூன் முதல் வாரம் 2011....

1 comment:

koyangopu said...

Sorry . . .No Comments