Thursday, June 27, 2013

அ...............க சில கவிதைகள் - 4

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)



என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !




 அன்று 

ஒரு சிறிய ஊடல்... 

அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய்  ;-)

தயவுசெய்து இனி ஒருநாளும் 

ஆனந்த கண்ணீர் கூட சிந்திவிடாதே  ...

ஏனென்றால் 

ஒரு மனிதனால் தாங்ககூடிய வலியின் அளவு 45 டெல் அலகுகள் தானாம் 

ஆனால் உன் ஒவ்வொரு துளி கண்ணீர் சிந்தும் போதும் 

என் இதயத்தில் உண்டாகும் வலி 100 டெல் அலகுகளை தாண்டுகிறதே!!!


******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)


என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !



ஒரு வேலை நாள் ...

நீண்ட நேரத்திற்கு பிறகு 

உன் கைபேசியில் இருந்து ஒரு அழைப்பு ....

'ஒ ' என்று...கத்த வேண்டும் போல இருந்தது...

துவும் பேசவில்லை நான் 

மௌனமாகவே இருந்தேன்...

வார்த்தைகள் வரவில்லை 

பேசி பேசி ஓய்ந்திருந்தேன்.

ஆம் 

உன் குரலை கேட்க காத்திருந்த நேரங்களில் 

நான் என்னை மறந்து கொட்டிய 

உளறல்களை 

யாரேனும் கேட்டிருந்தால் 

நிச்சயம் அதை 

காதலர்களின் தேசிய கீதமாக  அறிவித்திருப்பார்கள் !!!


******************************************************************************************************

அ...............க ஒரு கவிதை :- 10  ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.)


என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !





ஒவ்வொரு நாளும் 

பின் இரவுகளில் 

நடக்கும் 

நம் கைபேசி உரையாடல்களில் 

அடிக்கடி நான் மௌனமாகி விடுவேன் 

தூங்குறியா ? 

சொல்லு தூங்குறியா ? 

மீண்டும் மீண்டும் 

கேட்டுக்கொண்டே இருப்பாய் 

இல்லை என்பேன் 

இல்ல பொய் சொல்ற...

இல்ல அம்மு தூங்கல ...

நல்லா தூங்கு 

போ...

பேசாத

போன  வை....

உன் கோபம் அதிகமாகும் 

கடைசியாக

 நீ 

வழக்கமாய்  சொல்லும்  வார்த்தைகள்  

அம்மு...

இன்னும் ஒரு வாரத்திற்கு என்கிட்டே பேசாத 

குட் பை...

இப்பொழுது முழுவதுமாய்  ஆழ்ந்திருப்பேன் 

இணைப்பு துண்டிக்கப்பட்ட  அடுத்த சில நிமிடங்களிலேயே  

மீண்டும் உன்னிடம் இருந்து அழைப்பு வரும் 

சாரி தங்கம்...

வா ..... வா ..... எந்திரி 

ஒரு கதை சொல்லி என்ன தூங்கவை...

எங்கேயிருந்து வருமோ  எனக்கு அந்த உற்சாகம் 

நான் சொல் தொடங்குவேன்...

கதையின் பாதியிலேயே 

என் தூக்கத்தையும் சேர்த்து நீயே  தூங்கிவிடுவாய் !!!

******************************************************************************************************



இப்படிக்கு
மு.வெ.ரா...
திருநெல்வேலியிலிருந்து... 

Wednesday, January 23, 2013

ஐ.சி.யு


இரவு பதினோரு மணிக்கு மேல இருக்கும் 

நடுரோட்டில ஒரு அம்மா அரை மயக்கத்தில ஒரு வாலிப பையன்ன தோள்ல சாய்ச்சுகிட்டு நிற்கிறாங்க...
   
   அந்த நெடுஞ்சாலையில சீறி பாய்ந்து வர்ற மாருதி கார் ஒன்னு சடன் பிரேக் அடிச்சு அவங்க முன்னால நிக்குது...

   வண்டியில டிரைவர் சீட் பக்கத்தில உட்கர்ந்த்ருக்கிற அஜய் தலைய வெளிய நீட்டி"கெட்ட வார்த்தையில திட்டுறான் நீங்க சாக ஏன் வண்டி தான் கிடைச்சுதா தள்ளும்மா "

  "வீட்டில ஒரு சின்ன பிரச்சனை என் பையன் ஏதோ மருந்த குடிச்சுட்டான். இந்த பக்கம் ரொம்ப நேரமா எந்த வண்டியும் வரல கொஞ்சம் எங்கள ஆஸ்பத்திரில இறக்கி விட்டுட்டு போறீங்களா "பதட்டமாக சொன்னா அந்த பெண்...

    வண்டிக்குள்ள பின்னாடி மூணு பேர் முன்னாடி ரெண்டு பேர் அதுல ஒரு குரல் "கிளம்பு கிளம்பு நமக்கு  ஏற்கனவே நேரமாகுது"

     அஜய்க்கு மனசு கேட்கல டிரைவர்ட்ட சொல்றான் "இன்னும் ஒரு கிலோமீட்டர்ல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்குடா போற வழிதான இறக்கி விட்டுட்டு போயிறலாம்"

     ஒரு நிமிஷம் யோசிச்ச டிரைவர் சொல்றான் "சரி சரி சீக்கிரம் ஏறுங்க "  

வண்டி முன்ன விட  இப்ப வேகமா கிளம்பி போய்  அந்த ஊர் அரசு மருத்துவமனையில நின்னது  ...

  ஆஸ்பத்திரியோட அவசரசிகிச்சை பிரிவு வாசல்ல ரெண்டு பேரையும் இறக்கி விடவும் அந்த அம்மா "தம்பி ஒரு கை பிடிச்சு உள்ள வந்து விட்டுட்டு போங்கபா "கெஞ்சுறாங்க ....

    "ஒரு நிமிஷம்டா வந்துறேன் "பதில் எதிர்பார்க்காம வண்டியில் இருந்து இறங்குற அஜய் ஒரு கை பிடிச்சு அந்த பையன  தூக்கிக்கிட்டு  ஐ.சி.யுக்குள்ள நுழையுறான் ....

    அன்னைக்கு மூணு ஆக்சிடெண்ட் கேஸ் ஒரு பக்கம்  தையல்  போட்டுட்ட்ருக்காங்க அந்த ஆள் வலி தாங்காம  அலறிட்டிருக்காறு..

       பெட் எல்லாம் புல் ஆகிருந்தது  மூணு போன் பிராக்ச்சர் இட இல்லாம  கேஸ்  தரையிலதான்  படுக்க வச்ச்ருக்காங்க ...

        அஜய் கொண்டு வந்த பையனையும் கீழ படுக்க வச்சுட்டு வெளிய வர பார்க்கிறான் அப்ப அங்க இருக்கிற  டாக்டர் "சார் எங்க போறீங்க,நைட் ஷிப்ட்ல ஆள் இல்ல  ஒரு கை பிடிங்கனு சொல்லிட்டு என்ன விஷம் எப்ப குடிச்சாங்க அது இதுன்னு சில கேள்விகள் கேட்டுட்டு தயாரா  இருக்கிற  சோப்பு நுரை குழாய் எடுத்து  மருந்து குடிச்ச பையன் வாயில விடுறாரு"

     அஜய் மணிய  பார்க்குறான் உள்ள வந்து பத்து நிமிஷம் ஆயிடுச்சு ...

அவன் போன் வைப்ரேட் ஆகிட்டே இருக்கு.... அவன் அத எடுக்கல 

ரூம் முழுக்க ஒரே ரத்த வாடை...

எல்லா பக்கமும் வலியால துடிக்கிரவங்களோட சத்தம்.. 

இன்னும் பல மெடிக்கல் உபகரனங்களோட சத்தம்னு ஒவ்வொன்னா அவன் காதுல விழுது 

பக்கத்தில ஒரு ஆள் இழுத்து இழுத்து சிரமப்பட்டு மூச்சு விட்டுட்டு இருக்கார் ....

    இந்த எல்லா  விஷயமும் சேர்ந்து அஜய்க்கு லேசா  தலை சுத்த வைக்குது கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு அவனுக்கு தெரியல ,எல்லாம் மங்களா இருக்கு அவனுக்கு அந்த டாக்டர் சொல்றது கேட்குது "கூட் பேஷன்ட் பிழைச்சுக்கிட்டார் சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்தீங்கனு சொல்லிட்டே அந்த  பையன் வாயில உள்ள குழாய எடுக்கிறார்...

    அஜய்க்கு குமட்டிட்டு வருது அந்த பையன பிடிச்சிருந்த கைய எடுத்துட்டு மெதுவா வெளிய வர்றான்...அவன் பின்னாடியே இவங்க வண்டியில வந்த அந்த விஷம் குடிச்ச  பையனோட அம்மா" தம்பி நீங்க நல்ல இருக்கணும் என் பையன் உசிர காப்பாத்திட்டீங்க உங்களுக்கு எந்த குறையும் வராது "னு வாழ்த்திட்டு போறாங்க"
     
    

ஐ.சி.யு வாசலுக்கு வர்ற அஜய  இடிச்சுட்டு ஒரு அம்மா வேகமா உள்ள ஓடுறாங்க சட்டுன்னு குனிஞ்சு அவன் சட்டைய  பார்க்கிறான் ஒரே  ரத்தம் திரும்பி அந்த அம்மாவ பார்க்கிறான் அவங்க கையில ஒரு ஆறுமாச குழந்தை கட்டில இருந்து  ரத்த வெள்ளத்தில இருக்கு...கட்டில்ல இருந்து விழ்ந்துட்டான் டாக்டர் என் பிள்ளைய காப்பத்துங்கனு அந்த அம்மா கதுறுற சத்தம் இவனுக்கு நல்லா கேக்குது  ...

    தட்டுதடுமாறி வெளிய வந்து ஐ.சி.யு பக்கத்தில இருக்கிற  சுவத்தில சாய்ஞ்சுகிட்டு ஒரு நிமிஷம் யோசிக்கிறான்  அஜய். அவன் ஆஸ்பத்திரிக்குள்ள வந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம் தான் இருக்கும்.ஆனா ஒரு யுகம் போன மாதிரி மலைச்சு  போயிருக்கான்.அவன்  செல் எடுத்து பார்க்கிறான் அதுல 15 மிஸ்டு கால் கார்ல இருந்தவங்ககிட்ட இருந்து வந்தருந்தது..

      போன்ல ஒரு நபருக்கு டைல் பண்றான் எதிர்முனையில் போஃ ன்  அட்டெண்ட் ஆகவும் "ஹலோ டாக்டர் ராஜதுரை வீடானு கேட்டான் .

      அந்த பக்கம் ஆமானு பதில் வர 

இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க வீட்டுக்கு வந்து உங்கள கொலை பண்ண  போறாங்க தப்பிச்சு போயிருங்க ....

எதிர் முனையில ஹலோ நீங்க யாரு பேசுறது ஹலோ யாருங்க......

அஜய் கால் கட் ஆயிடுச்சு....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

அம்மா அப்பா



     ஏம்பா பிரேம் டைட்  பண்ணு

 "இன்னும் கொஞ்சம்  ஒரு எக்ஸ்போசர் கட் பண்ணு "

"ஓகே பிக்ஸ் " 

"அப்புறம்  ஆங்கர் ,கெஸ்ட் ரெண்டு பேரையும் வாய்ஸ்கொடுக்க சொல்லு"  

     அந்த பிரபல தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியோட படப்பிடிப்பு அரங்கதுக்குள்ள உள்ள இருக்குறவங்களுக்கு  பார்த்து வெளிய டெக்னிகல் ரூம்ல ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து அடுத்தடுத்து கமெண்ட்ஸ் பறக்குது.

     அது மாலை நேர மருத்துவ நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு 

ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து "கியூ " சவுண்ட் வர...

     தொகுப்பாளர் சரஸ்வதி பேச தொடங்குறாங்க "அனைவருக்கும் காலை வணக்கம் இன்று மருத்துவ நேரம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பிரபல குழந்தை நல மருத்துவர் இன்ப செல்வி வணக்கம் மேடம்"

     "நேயர்களுக்கு அன்பு வணக்கம்" என்றாள்  இன்பசெல்வி.
  
 


     சரஸ்வதி "மேடம் என்னோட முதல் கேள்வி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இன்னைக்கு அதிகமாயிட்டே இருக்குது.ஒரு குழந்தையோட மன உடல் வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க நாம என்ன பண்ணணும்?"

      அவ்வளோதான் அந்த டாக்டர் ஆவேசமா  பேச தொடங்குறாங்க"ஒன்னும் பண்ணகூடாதுங்க அப்பா அம்மா ரெண்டு பேர்ல ஒருத்தராவது வேலைக்கு எதுவம் போகாம வீட்லயே குழந்தைகள் கூட ஒரு அஞ்சு வயசு வரையாவது இருந்து கவனிச்சுக்கணும். அதுவே போதும்".சொல்லிமுடிக்கிறாங்க....

       அடுத்தடுத்து   கேள்விகள்  தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம்  முழுக்க உள்ள தமிழர்கள் வாழுற எல்லா நாடுகள்ல இருந்தும்  நெறைய தொலைபேசி அழைப்புகள் வந்துட்டே இருந்தது. எல்லாத்துக்கும் டாக்டர் இன்பசெல்வியோட பதில் ரொம்ப நிறைவா இருந்ததது போல சந்தோசமா நன்றி சொல்லிட்டு வச்சாங்க...

      நேரம் போனதே தெரியல முதல் விளம்பர இடைவேளை ..

கேமரா  அட்ஜஸ்ட் பண்ணி லைட்டிங் செக் பண்ணிட்டு இருக்காங்க டெக்னீசியன்ஸ்....

     அப்ப குழந்தை நல மருத்துவர் இன்பசெல்வி  செல்போனுக்கு ஒரு கால் வருது அட்டெண்ட் பண்ணினவங்க  "ஹலோ யாருனு  கேட்கிறாங்க எதிர்பக்கம்  வணக்கம் மேடம் நாங்க உங்க பொண்ணு படிக்கிற க்ரீச்ல  இருந்து பேசுறோம் எல்லா பேரண்ட்சும்  வந்து  அவங்க அவங்க குழந்தைகளா கூட்டிட்டு போயிட்டாங்க க்ளோசிங் டைம் ஆயிடுச்சு உங்க குழந்தை  உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கா உங்க ஹஸ்பண்ட்  நம்பர் ட்ரை பண்ணினோம் பிஸினு வருது"  எப்ப  வறீங்க மேடம்னு கேட்டாங்க 




அதுக்கு மருத்தவர்  இன்பசெல்வி "ஐயம் லிட்டில் பிசி  கால்  யு லேட்டர்னு" சொல்லிட்டு கட் பண்ணிட்டாங்க... 


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-ஆகஸ்டு மூன்றாவது வாரம் 2011

முரண்



கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம் கனவு சேவியருக்கு 18 வயசு ஆனதுல இருந்து பாஸ்போர்ட் எடுக்கிற முயற்சியின் இறுதியில, புரோக்கர் இல்லாமல் ஒரு வார போராட்டத்துக்கு அப்புறம் ஆன்லைன்ல அப்பாயின்மென்ட் வாங்கி  பாஸ்போர்ட் ஆபிஸ் கியுல வந்து நிற்கிறான். 


     


      "9.15 அப்பாயின்மெயின்ட்லாம் உள்ள வாங்க கூட யாரும் வரகூடாது "  பாஸ்போர்ட் ஆபிஸ் செக்யுரிட்டி சொல்லிட்டு மெட்டல் டிடக்ட்டர் வச்சு உள்ள வர்ற ஒவ்வொருத்தரையா செக் பண்ண ஆரம்பிக்கிறார்....

        பயத்தோட அந்த ஏ.சி.அறைகுள்ள நுழையுற சேவியர் .அங்க வரிசையா இருக்கிற 5  கஸ்டமர் கவுண்ட்டர்ல எதுல நிக்கலாம்னு யோசிச்சு வரிசை நீளம் கம்மியா இருக்கிற ஐந்தாவது கவுன்ட்டர்ல போய் நிக்கிறான்.அப்ப அவன் பக்கத்துல நிக்கிற ஆள பார்த்து அங்க இருக்கிற என்கொயரி ஆபிசர் "சார்   4ஆம் கிளாஸ் வரைக்கும் படிச்சிருந்தா  தமிழ்ல தான் கையெழுத்து போடணும்.இங்கிலிஸ்ல போடுறீங்கனா நோட்டிரி  பப்ளிக் கிட்ட ஒரு செர்ட்டிபிக்கேட் வாங்கிட்டு வந்துருங்கனு " சொல்றார் 

       சின்ன வயசுல படிக்க வாய்ப்பில்லாம போனாலும் கஷ்டப்பட்டு தன்னோட கையெழுத்த ஆங்கிலத்தில எழுத  பயிற்சி பண்ணின அந்த ஆள் வருத்ததோட வெளிய போறார்.இப்படி அங்க நின்ன பல பேரு சின்ன சின்ன காரணங்கள்னால அவங்களோட பாஸ்போர்ட் அப்பிளிகேசன் ரிஜெக்ட் ஆகி வெளிய போயிக்கிட்டேயிருக்காங்க....

       இத பார்க்கிற சேவியர் பயத்தோட அவன்  செர்டிபிகேட்ஸ் எல்லாம் வெரிபிக்கேசனுக்கு கொடுக்கிறான்.இவன் காலேஜ் டிஸ்கண்டிநியு. இப்ப கொஞ்ச நாளா ஒரு கடை வச்சு நடத்திக்கிட்டு  இருந்தான்.12த்  செர்டிபிகேட் கொடுத்து ஒவ்வொரு கவுண்டர்லையும் விசாரணை முடிஞ்சு கடைசியா பாஸ்போர்ட் ஆபிசர மீட் பண்றதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டான்.எல்லாம் சரியாதான் வச்சுருக்கான் பணமும் கட்டிட்டான்.அந்த ஆபிசர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டான். கடைசியா ஒரு கேள்வி கேட்டார் " ப்ளஸ் டு படிச்சு இத்தன வருஷமா எங்கயுமே வேலை பார்த்தது இல்லையானு அப்பவே இருந்து பிஸ்னெஸ் தான் பண்றீங்களா" னு  கேட்டார் . ஒரு முனு மாசம் முன்னாடி வரை சென்னைல வொர்க் பண்ணினேன் இந்த மாசம் தான் கடை ஆரம்பிச்சேன்."னு சொல்லவும் பிடிச்சுகிட்டார்.தம்பி அந்த கம்பெனி இருக்கிற ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க உங்க பாஸ்போர்ட் கிளியர் பண்ணிரலாம்னு சொல்லிவெளிய அனுப்பிட்டார் .   
          
        மூணு மணி நேரம் காத்திருந்து பாஸ்போர்ட் எடுக்கமுடியாம போனதுல ரொம்ப நொந்துட்டான்.வெளிய வந்து நேரா பாஸ்போர்ட் ஆபிஸ்  வாசல்ல இருக்கிற டீகடைக்கு வந்து உட்கார்ந்தவன் "அண்ணன் சூடா  ஒரு இஞ்சி டீ போடுங்க"னு சொல்லிட்டு பெஞ்சல இருந்த நியுஸ் பே ப்பர எடுத்து திருப்புறான்.அதுல இருந்த ஒரு செய்தி பார்த்து மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டான் .அது  அரை பக்கத்திற்கு வந்தருந்தது  "  பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நான்காவது பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்"   


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

காதல் டூ கல்யாணம்



           ஹேய் ராஜி  இந்த பேப்பர்ல போட்டிருக்கிற நியூஸ் பாரேன் . "அவன விட  வயது மூத்த காலேஜ் புரோபஸர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான் ஒரு பையன் .அவங்க வீட்டிலையும் அவங்கள ஏத்துக்கிட்டாங்க..அவங்கலாம் ரொம்ப லக்கி இல்லடா  நா என் சொந்தகார பொண்ணு உன்ன பிடிச்சு போய் லவ் பண்ணி  கல்யாணம் பண்ணினேன். அதுக்கு உங்க குடும்பமே  நம்மள ஒதுக்கி வச்சுட்டாங்க.நமக்கு பொண்ணு பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் உன் அம்மா அப்பா  அண்ணனுங்க யாரும் வந்து அவ முகத்தை கூட பார்க்கல  அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமடி " தன்னுடைய ஆற்றாமையை  வெளிப்படுத்தினான் முத்துகுமார்.

         ஆமாங்க நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாளாச்சு .எங்க அண்ணன் கல்யாணத்துக்கு  இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.இதுக்கும் கூட நம்மள கூப்பிட மாட்டாங்க போல " ராஜி இந்த   வார்த்தைகள சொல்லும் போது அவளுக்கு லேசா தொண்டை அடைக்க ஆரம்பிச்சிருந்தது.

           " ஏண்டி இப்ப பீல் பண்ற  விடு நாமளும் போய் பேசி பார்த்தாச்சு எல்லா சொந்தகாரங்களும் நமக்காக பேசிட்டாங்க உங்க  வீட்டில நம்மள வேண்டவே வேண்டாம்ங்கிறாங்க . நாம என்ன தான் பண்றது...நம்ம கதை சினிமா  படத்த விட பெரிசால  இருக்கு.நா ஒன்னு சொல்றேன் கேளு இப்ப உங்க அண்ணன்  கல்யாணத்துக்கு மட்டும் நம்மள கூப்பிடல நம்ம  குடும்பமும் சேரவே முடியாது " முத்துகுமார் சொல்லி முடிக்கவும் ராஜி அழ ஆரம்பித்துவிட்டாள். 

              இதே நேரத்தில ராஜி வீட்டில அவங்க அம்மா ரெண்டு அண்ணன் சித்தி இன்னும் சில உறவினர்கள் எல்லாரும் கல்யாண ஏற்பாடுகள்  பத்தி பேசுறதுக்காக உட்கார்ந்திருக்காங்க அவங்க சித்தி  தான் முதல பேச்ச ஆரம்பிச்சாங்க "ராஜிய கல்யானத்துக்கு கூப்பிட்டுட்டிங்களா "

           அவ பேச்ச  எடுக்கிற யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம் கோபமா பேசின  ராஜி சின்ன அண்ணன் அந்த அறைய விட்டு எந்திரிச்சு வெளிய  போறான்.அப்ப அங்க  இருந்த ஒரு பெரியவர் " நம்ம குடும்ப ஜோசியர்ட்ட பேசிதான நாள் குறிச்சிருக்கீய " என்று கேட்கிறார்.

     " இல்லயா பொண்ணு வீட்ல தான் நாள் குறிச்சாங்க நம்ம ஜோசியர் காசி போயிருக்கார் இன்னும் வரல" தயங்கிகிட்டே ராஜி அப்பா சொல்லிக்கிட்டிருக்கும் போதே  அவங்க குடும்ப ஜோசியர் அவங்க வீட்டுக்குள்ள நுழையவும் சரியா இருந்தது...

     "ஏம்பா என்ன கூப்பிடாமலே உன் மூத்தமகன் கல்யாணத்த முடிச்சிரலாமுனு பார்க்குறியா" செல்ல கோபத்தோட கேட்டுட்டே சோஃபால வந்து உட்காருராறு அவங்க குடும்ப ஜோசியர்.

       "வாங்கய்யா அப்படிலாம் ஒண்ணுமில்ல எப்ப வந்தீங்க ஊர்ல இருந்துன்னு..." வார்த்தைய முழுங்குராறு ராஜி அப்பா... 
       
         அதுக்கு ஜோசியர் "நா பஸ் இறங்கி நேர உங்க வீட்டுக்கு தான் வரேன் .ஆமா கல்யாணம்  என்னைக்கு வச்சுக்ருகிய?னு " கேட்டார்.

         "அய்யா தை பத்தாம்நாள் வர்ற திங்கள்கிழமை வச்சுருக்கோம் .நீங்க சொன்ன நட்சத்திரத்தில தான் பொண்ணு பார்த்துருக்கோம். 
நம்ம பிள்ளைகள் ஜாதகம் இது நீங்களும்  ஒரு தடவை பார்த்து அந்த நாள் நல்லது தான்னு கொஞ்சம் பார்த்து சொல்லிட்டிங்கனா எங்க எல்லார் மனசும்  திருப்தியாயிரும்" இப்படி சொல்லிட்டே மாப்பிளை பொண்ணு ஜாதக ஜெராக்ஸ் எடுத்து ஜோசியர் கையில கொடுக்கிறாரு  ராஜி அப்பா ...

        அத வாங்கின ஜோசியர் கொஞ்சம் திருப்பிட்டு கட்டத்த எண்ணி எதோ மன கணக்கு போடுறாரு, அப்படியே தன்  கையில இருக்கிற மஞ்சபைய எடுத்து தூசி தட்டி அதுக்குள்ளே இருக்கிற ஒரு ஏடு எடுத்து பார்க்கிறாரு "ஒரு ரெண்டு நிமிஷம் யோசனைக்கு அப்புறம் மெதுவா பேச ஆரம்பிக்கிறாரு"நா சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க இப்ப உங்க பையனுக்கு நேரம் சரியில்ல,ஆனா நீங்க  தேதி குறிச்சு பத்திரிகை எல்லாம் குடுத்துட்டிங்க.  நீங்க நெனைக்கிற தேதியில கல்யாணம் பண்ணணும்னா   உங்க பையனோட  உடன் பிறந்தாளுக்கும் அவ மாப்பிள்ளைக்கும் புது துணி எடுத்து கொடுத்து உங்க குடும்பம் எலாரும் சேர்ந்து போய் உங்க குலசாமி கோவில்ல ஒரு பொங்கல் வச்சு படையல் போட்டுருங்க எல்லா பிரச்சனையும் தானா சரியாகிரும்"  சட்டுப்புட்டுனு ஆகிற வேலைய பாருங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு  அந்த ஜோசியர்..

       ஒரு நிமிஷம்  ஒருத்தர் முகத்த  ஒருத்தர் பார்த்துக்குறாங்க,அவங்க அப்பா அம்மா பெரியண்ணன் 
எல்லாரும் அப்புடியே அமைதியா இருக்காங்க ,திரும்ப உள்ள வர்ற ராஜியோட  சின்ன அண்ணன் மட்டும் இன்னும் கோபமாகி "ஏம்ப்பா இந்த ஜோசியர் சொல்றதெல்லாம் நம்பாதீங்க அவளெல்லாம் கூப்பிட முடியாது .நம்ம சம்மதம் இல்லாம அவளுக்கு பிடிச்ச  மாப்பிள்ளைய கட்டிட்டு போனால அவகிட்ட போயெல்லாம் நிக்க முடியாது" னு கத்துறான்.

        அப்ப ராஜியோட அப்பா அவ சித்திக்கிட்ட மெதுவா கேட்கிறாரு "ஏம்மா என் பொண்ணு வீடு எங்க இருக்கு ஒரு எட்டு போய் அவளயும் அவ அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிட்டுட்டு வந்துருவோம்ங்கிறார்"

        இதே நேரத்தில அங்க ராஜி வீட்டில அவளுக்கு விக்கல் எடுக்குது....


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

நடைநேரத்தில் சில நிமிடங்கள்


          விசு பியூர் வெஜிடேரியன் எல்லாமே சரியா இருக்கனுமுன்னு நெனைக்கிறவன். கடவுள் பக்தி ரொம்ப அதிகம் கொஞ்சம் சுத்தம், ஆனா அடிக்கடி ரோட்டில எச்சில் துப்புவான். அதவச்சு அவன லாக் பண்ணுவான் சம்பத் இவன் விசுவோட வாக்கிங் பிரென்ட் .அதாங்க காலையில உடம்பு குறைக்கிறேங்கிற பேர்ல கதை அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு வருவாங்கள அந்த கூட்டத்த சேர்ந்தவங்க ... 

          சம்பத் ஒரு 'எக்கிடேரியன்' வெஜிடேரியன் தான் எக் மட்டும் சேர்த்துக்குற மாடர்ன் பையன் வேற வழியில்ல காலத்துக்கு ஏற்றமாதிரி மாறிதான ஆகணும்.  


         இரண்டு பேரும் மிடில் கிளாஸ் தான். தினமும் காலையில ஜிம் போகணுமுன்னு இவங்களுக்கு ஆசைதான் வசதியில்ல, அதனால 6 மணிக்கெல்லாம் முயற்சி பண்ண ஆரம்பிச்சி ஒரு வழியா 7 மணிக்கு வாக்கிங் போக  ...
தொடங்குவாங்க....

          இவங்க போற வழி எல்லாம் நெறைய கறிகடைகளா இருக்கும் சம்பத் சாதாரணமா வந்தாலும் விசு வால   மூக்க பொத்தாம வர முடியாது. தினமும் ஏதாவது சொல்லிக்கிட்டே வருவான் .அன்னைக்கும் அப்படிதான்  வாக்கிங் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தில அந்த கறிக்கடைகள்  இருக்கிற ரோட்டு பக்கம்  வந்துட்டுருந்தாங்க ,அப்ப விசு சொல்றான் "ஏண்டா சம்பத் தினமும் இந்த கறியெல்லாம் எப்படித்தான் ருசிச்சு ரசிச்சு திங்கிறாங்களோ ரத்தமும் சதையுமா ப்பா நெனைச்சாலே உதறுது நிம்மதியா வாக்கிங் போக விடுறாங்களா வெஜிடேரியன் ஹோட்டல் நான் வெஜ் ஹோட்டல்னு இருக்கிற மாதிரி நான் வெஜ் கடைகள் தனியா ஒரு ஏரியா பிரிச்சு அங்க திறக்க வேண்டியதான இந்த கரி கடைய, இப்படி நாம போற ரூட் எல்லாத்திலையும்  ஒரு கடைய திறந்து வச்சு சாகடிக்கிறாங்களே  " புலம்பி தள்ளிட்டான் 

     சம்பத் அவன் பக்கமே திரும்பல மெதுவா காதில ஹெட் போன மாட்டிட்டு எப்.எம் கேட்டுக்கிட்டே  வாக்கிங்க  கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டான்...

    சம்பத்கிட்ட இருந்து பதில் வராததுனால அமைதியா இருந்த விசு ஒரு ரெண்டு தெரு போகவும் திரும்பியும் வேற ஒரு பிரச்சனைய ஆரம்பிச்சிட்டான் .அங்க ஒரு நாலஞ்சு பொண்ணுங்க விதவிதமா நகைகளா போட்டுக்கிட்டு எங்க கடையில் நகை வாங்குங்க உங்க ஊரே செழிக்கும்னு போஸ் குடுத்துட்டு நிக்கிறாங்க.. 

  "டேய் சம்பத் இங்க பாருடா அடுத்த கடைய நம்ம ஊர்ல ஆரம்பிச்சிடாங்க கடந்த ரெண்டு வருஷத்தில மட்டும் நம்ம ஊர்ல புதுசா ஒரு பத்து நகை கடை வந்துருக்கு. தங்க நகை விலை நாளுக்கு நாள் ஏறிக்கிட்டு இருக்கு .ஆனா இங்க எல்லா கடையிலையும் எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே தான் இருக்கு.இவங்களுக்கு மட்டும் எங்கேர்ந்துதான் காசு வருதோ?"விசு இப்புடி சொல்லி முடிக்கவும் டெண்சன் ஆயிட்டான் சம்பத்.

      "விசு கொஞ்ச நேரம் அமைதியா நடக்க மாட்டியா உனகெல்லாம் எதுக்கு டா வாக்கிங் ...." என்றான் சம்பத்

        விசு விடல "சம்பத் இப்புடி காலையிலேயே பல விஷயங்கள் மனச ஸ்பாயில் பண்ணிருதுடா, இந்த டென்சன்ல ஆபிஸ் போனா அங்கையும் பல தொல்லைகள் எனக்கு ஒரு நாள் போறது ஒரு யுகம் மாதிரி இருக்குடா என்னடா வாழக்கை இது ஒரு நிம்மதி இல்ல நம்மளால என்ன முடியும் இப்படி புலம்பிட்டே போயிற வேண்டியதான்...லைப்ல ஒரு சந்தோசம் இல்ல வேலைக்கு போறோம் சாப்பிடுறோம் தூங்குறோம் அவ்வளோதான் "விரக்தியா சொன்னான் விசு...

         அப்ப அங்க ஒரு குரல்  ரெண்டு பேர்  கவனத்தையும் ஈர்த்துது...

மல்லி கீரை.... அர கீரை.... பொண்ணாங்கண்ணி கீரை.....பசலிக்கீரை.....
  அம்மா அக்கா  கீரை வாங்கலியோ நாட்டுக்கீரை ஒரு கட்டு அஞ்சு ரூபா கீரை...கீரை.....கீரை...

      ஒரு நிமிஷம் அந்த ஆள  திரும்பி பார்த்த விசு "ஹலோ கீரை கொஞ்ச இங்க வாங்கனு  கூப்பிட்டான் "  

        அவர் வேகமா நடந்து இவங்ககிட்ட வர்றாரு இத பார்த்துகிட்ட்ருந்த சம்பத் ஏதோ முடிவு பண்ணின மாதிரி பேச ஆரம்பிச்சான் "விசு இந்த கீரைகாரர்ர பாருடா நான் நாலாங்கிலாஸ் படிக்கும் போதிலிருந்து இந்த அய்யா நம்ம ஏரியால தான் கீரை விக்கிறாரு ஒரு நாலாவது சிரிச்ச முகம் மாறினதில்ல இவங்களா இந்த உலகத்தில சந்தோசமா  வாழல" சும்மா என்னக்கு மட்டும் இப்புடி அப்புடின்னு புலம்பிறது நிறுத்து இல்ல நாளைல இருந்து நான் உன் கூட வாக்கிங் வர மாட்டேண்டா"  

     அதுக்குள்ளே அவர் வந்துட்டாரு விசு ஒரு இருபது ரூபாயைய அந்த  ஆள்கிட்ட குடுத்து ஒரு கட்டு கீரை கேட்கிறான்.அவர் கீரைய கொடுத்துட்டு "அய்யா என்கிட்டே சில்லறை இல்லங்க நீங்க தான் முதல் போனி அஞ்சு ரூபாய் இருந்த கொடுங்கன்னு கேட்கிறார்.   
  
     சம்பத் டக்னு அவன் பாக்கெட்ல இருந்து ஒரு அஞ்சு ரூபாய் நோட்ட எடுத்து கொடுக்கிறான்.அத வாங்கின அந்த கீரைகாரர் ஒரு நிமிஷம் அந்த நோட்ட பார்த்துட்டு  சம்பத் கிற "அய்யா ரொம்ப நன்றி இந்தாங்க இத வச்சுகோங்கனு " சொல்லி ஒரு சின்ன கட்டு கீரைய கொடுக்கிறாரு "

       எதுக்கு இதுங்கிற மாதிரி மனசில நெனைச்சுகிட்டு அத வாங்க கையா நீட்டினான் சம்பத் அப்ப "டேய் சம்பத் இதுக்குதான் இப்படி ஓசி கீரை வாங்கிறதுக்குதான் இந்த கீரைக்காரற பத்தி கொஞ்சம் நேரம் புகழ்ந்துக்கிட்டிருந்தியா சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்" என கிண்டலா பேசினான் விசு..

         பதில் சம்பத் கிட்ட இருந்து வரல அந்த கீரைகாரர்கிட்ட இருந்து வந்தது  "அய்யா அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இந்த அய்யா ரூபா கொடுத்தப்ப என்  மனசு ரொம்ப சந்தோசமா இருந்த்து . அதான் கீரைய சும்மா கொடுத்தேன் இந்த ரூபாய் நோட்ட கொஞ்சம் பாருங்கனு  இவங்க பக்கமா திருப்பி காட்டினார்.

         அதுல "நல்ல பெரிய எழுத்துகள்ல  "இறைவன் உன்னை உயர்த்துவார் மகிழ்ச்சியாயிரு"னு  எழுதியிருந்தது.


இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

பழிக்கு பழி




   அப்படியா 
   ஆ ...
   சாப்பிட்டேன்....ம் ம் ....

  ராத்திரி சாப்பாட்டுக்கு சப்பாத்தி போட்டு வைனு  சொல்லிட்டு போஃ ன கட் பண்றான்  சிவா...

    அவன்  ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வயசு கம்மிதான்.ஆனா நெறைய ஆலோசனை சொல்றேன் உதவி பன்றேன்கிற பேர்ல நாள் முழுக்க போஃன் பேசிட்டே இருப்பான்.

       வீட்ல இருந்து அம்மாவோ அவன் தங்கச்சியோ போஃன் பேசினா மட்டும் ஆ..சரி...ஓகே... அவ்வளவு தான் இதுக்குமேல பேசமாட்டான் ஒரு நிமிஷத்தில போன கட் பண்ணிருவான் ஏன் சாப்பிடவும்,தூங்கவும் மட்டும்தான் வீட்டுக்கே போறான்னு வச்சுக்கோங்களேன்.

      ஆனா அவன்  வீட்டுல எல்லாரும் இவன் மேல உயிரே வச்சுருக்காங்க.என்ன சமையல் செஞ்சாலும் இவன் சாப்பிட்டு மிச்சம் இருந்தாதான் அவங்கலாம்  சாப்பிடுவாங்க எல்லாத்திலையும் இவனுக்கு  தான் முன்னுரிமை...

         ஏதாவது ஒரு சென்டிமென்டான குடும்ப படம் பார்த்தாலே அழுதுருவான்...படம் பார்க்குபோதே அவன் அம்மா தங்கச்சி மேல எல்லாம் பாசம் பொத்துக்கிட்டு வரும் படம் முடியும் போது போன இடம் தெரியாம போயிரும்....

       இன்னும் அவன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அவன் கல்யணம் பண்ணணும்.இதுக்கெலாம் எப்படி பணம் சேர்க்கிறது. இதுதான் அவனோட மிகப்பெரிய லட்சியம் .

        ஒரு நாள்  வழக்கம்போல அவன் வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தான்..டிவி பார்த்துகிட்டே அவனுக்கு முழிச்சிருந்து சாப்பாடு பண்ணி வச்சு பரிமாறிக்கிட்டிருக்கிற தங்கச்சிய ஏதோ டென்சன்ல நல்ல திட்டிட்டான்.பதிலுக்கும் அவளும்  சத்தம் போட கோபத்தில அவ பின் தலையில் ஒரு அடி ஓங்கி அடிச்சுட்டான்.உடனே சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா அவன்  தங்கச்சி...

           தூக்கம் கலைஞ்சு அவன் அம்மாவும்  எந்திரிச்சுட்டாங்க  ஒரே சண்டை "பாவம் உன்ன இப்படி கவனிச்சுக்கிற பிள்ளைய போய் இப்படி அடிச்சிட்டியே "திட்டிட்டு அவங்க அம்மாவும் அழ ஆரம்பிச்சிட்டாங்க...

      சிவா எதையும் கண்டுக்காம என்ன கோவப்படுத்தாதீங்கனு கத்திட்டு  வீட்டோட  உள் அறையில போய் தூங்க போயிட்டான்... 

       தூக்கத்தில ஒரே கெட்ட கனவு வந்து எல்லாருக்கு முன்னாடி காலையில அஞ்சு மணிக்கெலாம் எந்திரிச்சு ஒரே யோசனையா உட்கார்ந்திருந்தான். மனசு கேட்கல "என்ன நாளும் நம்ம இப்படி  அடிச்சிருக்க கூடாது மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே"அவன் தங்கச்சிய எழுப்பி ரொம்ப வலிக்குதா சாரி அப்படிங்கிறான்.

       அப்ப அவன் தங்கச்சி "ஹே பழிக்கு பழி நான் நைட்டே உன் தலையில் பத்து குண்டு பேண்ன  எடுத்து போட்டுட்டேனே"  அபப்டின்னு கத்திட்டு  அந்த இடத்த  விட்டு ஓடி போயிட்டா...

        ஒரு சில நிமிஷம் அமைதியா இருந்து ஏதோ யோசிச்ச சிவா சிரிச்சுகிட்டே அவன் தலைய தடவி பார்க்கிறான் அதுக்குள்ளே உள்ள இருந்து திரும்பி வந்த அவன் தங்கச்சி ஒரு பேன் சீப்ப எடுத்துட்டு வந்து அவன் தலைய சீப்பால நல்ல சீவி ஒவ்வொரு பேண்னா  எடுத்து குத்த ஆரம்பிச்சிட்டா, ரொம்ப நேர தேடுதலுக்கு அப்புறம் சில பேன் கிடைக்கவும் உற்சாகமாகி  சொல்றா  " ஐ..... அண்ணா  ரெண்டு பேண்  தான் கிடைச்சுருக்கு நல்ல குண்டு பேண்  மீதிய காணோமே" 



இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011

கலியுக பாண்டவர்கள்


    முத்தம்மா கணபதி ரெண்டு பெரும் என்பதாம் கல்யாணம் பார்த்த தம்பதிகள்.அந்த கால உழைப்பு,உணவுகள்னால பிரசர் ,சுகர்னு எந்த நோயும் இல்ல, ஆனா  வயாதிகம் காரணமாக டிவி பிரிட்ஜ் ,எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீட்டில சமைக்க பாத்திரம் கழுவ வீடு துடைக்க மட்டும் வந்துட்டு போற வேலைகாரி துணையோட வாழ்ந்துட்டு வர்றாங்க. 

    இவங்களுக்கு மொத்தம் ஐந்து ஆம்புள பிள்ளைகள் பிறந்தது இருந்தாலும்  முத்தமாவையும் அவர்  கணவர் கணபதியையும் அவங்க அவங்க வீட்டில வச்சு ஒரு நாள் கூட பார்த்துக்க யாரும் தயாரில்ல யாரவது ஒருத்தர் வேணா  எங்க வீட்டுக்கு வரட்டும் பார்த்துகுறோம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்றதா இருந்த பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க, அதான் இவங்க எல்லா பையன்களோட குழுந்தைகளும் வளர்ந்துட்டாங்கல,இனி தாத்தா பாட்டி தேவையில்ல போல...

             அதனால வேற வழியில்லாம 90 வயசுக்கு மேல ஆன கணபதியும் என்பத்தைந்து  வயது ஆன அவர் மனைவி முத்தம்மாவும் சில வருஷங்களா தனியாதான் இந்த வீட்ட்ல இருக்காங்க.

            அவங்க பசங்க ரெண்டு பிரிவா பிரிஞ்சுருக்காங்க ஒருத்தருக்கும் அவங்களுக்குள்ள பெரிய அளவில ஒட்டு உறவில்ல அப்பா அம்மாக்கு பென்சன் எதுவும் கிடையாததுனால  ஆளுக்கு கொஞ்சம் பணத்த மாசம் மாசம் அனுப்புவாங்க.எப்பயாவது சில நாள் வந்து ரெண்டு பேரையும் பார்த்துட்டு ஒரு சிலமணி நேரம் மட்டும் இருந்து பேசிட்டு போவாங்க அவ்வளவுதான்.

          எல்லா வசதியும் இருந்தாலும் எதையும் செய்ய முடியாத அளவுக்கு தளர்ந்து போயிருக்கிற முத்தம்மா கணபதி ரெண்டு பேருமே சின்ன வயசில அவங்க தூக்கி வச்சு கொண்டாடின பசங்க செய்ய முடியாத காலத்தில துணைக்கு இல்லையே அப்படிங்கற வருத்தத்த வெளிகாட்டல எல்லா பிள்ளைங்க கிட்டயும் பாசமா தான் இருப்பாங்க...

          இன்னைக்கு அப்படி அவங்கள் பார்க்க வந்த இரண்டாவது பையன் பாலமுருகனுக்கு கை நடுங்க காப்பி போட்டு கொடுத்துட்டு இருக்கும்  போதே போ ஃன்  அடிக்குது அத அட்டெண்ட் பண்ற முத்தம்மா காதுல ஹலோ சொல்ல எதிர்முனையில ஒரு ஆள் குரல் கேட்கவும் பதறி போய் பக்கத்து  ரூம் குள்ள போறாங்க... 

       ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெளியில வராங்க...

  அப்ப அவங்க வீட்டு வேலைகாரி "என்னம்மா எதுவும் தூக்க செய்தியா னு" கேட்கிறாள் 

    அதுக்கு முத்தம்மா சோகமா சொல்றாங்க"இப்ப நா யாருக்கு போஃன் பேசினேன்னு தெரிஞ்சா எங்கள பார்க்க வந்துருக்கிற  என் ரெண்டாவது பையன் இனிமேல் எங்கள பார்க்க வரவே மாட்டான்..

          அதிர்ச்சி ஆகி "அப்படி யாருமா"என்று கேட்கிறா  

           மனம் கனத்த நிலையில் முத்தம்மா   சொல்கிறார் "என் சின்னபையன் தான் பேசினான் அவனுக்கும் இவனுக்கும் ஆகாது "உன் மத்த பிள்ளைங்க யாரும் அங்க வராதப்ப எனக்கு போஃன் பண்ணு, நா வந்து உங்கள பர்க்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போஃன கட் பண்ணிட்டான்மா" 

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்
திருநெல்வேலியிலிருந்து
காலம் :-2011